எனக்கு தெரிந்த முதல் ரேடியோ கோடம்பாக்கத்தில் வடபழனி ஆண்டவர் கோவில் பகுதியில் நங்கள் வசித்தபோது தான்.
அப்போது மார்கோனியை எனக்கு பரிச்சயமில்லை. தெரியாது. பின்னால், நுங்கம்பாக்கத்தில் தான் மார்க்கோனி என்கிற ரேடியோ கண்டுபிடித்தவர் அறிமுகமானார். அதற்கு காரணம் ஸ்ரீ விஜயராகவன் சார். ஏனென்றால் அவர் தான் எட்டாவது வகுப்பில் எனக்கு சயன்ஸ் வாத்தியார்.
ரேடியோ நான் இலவசமாக கேட்டது முதலில் கேசவ நாயர் டீ கடையில் தான். அதுவும் சாயந்திரம் ரூபவாகினி என்று ரேடியோ சிலோன் நிகழ்ச்சியை எல்லோரும் ஆவலாக கேட்பதை அறிந்து அதை வைத்திருப்பார். மயில் வாகனன் என்பவர் நீளமாக பேசுவார். நிறைய கிராமங்கள் ஆசாமி பேர்கள் எல்லாம் சொல்லி விட்டு அப்புறம் தான் ஏ. எம். ராஜா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் பாட விடுவார். விரும்பிக் கேட்ட நேயர்கள் குடும்பங்களின் பெயர்கள் விசித்தரமாக இருக்கும். நடு நடுவே கேட்கவிடாமல் சுசித்ராவின் குடும்பம் என்று ஒரு நிகழ்ச்சியை ஹார்லிக்ஸ் நிறுவனம் இடையில் செருகும்.
ஆகாசவாணி என்று ஒரு சிவரஞ்சனி ட்யூன் வெகுநாள் என்னை கவர்ந்தது. அந்த ட்யூனை பாடிக்கொண்டே சைக்கிளில் சுற்றியது நினைவிருக்கிறது
ரேடியோவை வீட்டில் பார்த்தது முதலில் சூளைமேட்டில் சம்பகம் மாமி வீட்டில். முத்து சாமி மாமா சாதுவாக காணப்பட்டாலும் கோபக்காரார். அவர் மகன் மாலி அறையும் குத்தும் வாங்கும்போது நான் தெரிந்து கொண்ட விஷயம் இது. மாமா ஒரு மர்பி ரேடியோ வைத்திருந்தார். பெரிதாக இருக்கும். அதன் தலையிலிருந்து ஒரு வயர் ஜன்னலை கடந்து மொட்டை மாடிக்கு போகும் அங்கு ஒரு மூங்கில் கொம்பில் ஐக்கியமாகும். ரேடியோவை அடிக்கடி வலது இடது பக்கமாக மாற்றி மாற்றி திருப்பினால் கொர கொர சப்தம் கொஞ்சம் குறைத்து கேட்கும் அவ்வளவுதான். கோரகொரவிற்கு இடையே இருமிக்கொண்டே மகாராஜா ஆப் விஜயநகர் விஜி என்று ஒருவர் பந்து எப்படி ஒருவன் போட்டான் எங்கே போகவேண்டிய அது எப்படி மார்க்கம் திரும்பி கிரிக்கெட் குச்சியில் படாமல் ப்ராரப்தமாக அந்த மட்டையாளன் காலையே சுற்றியது. அதனால் அவன் வெளியேறியது. எத்தனை தூரம் பந்து எகிறியது. எங்கே அடித்தார்கள் அதை யார் துரத்தியது. அதற்குள் எவன் தலை தெறிக்க அங்கும் இங்குமாக ஓடினான் என்றெல்லாம் சொல்வார். ஜனங்களின் சப்தம் கொரகொரவோடு ஐக்கியம் ஆகி ஒரே களேபரமாக இருக்கும். மாலி ஒருநாள் அந்த ரேடியோவை எங்கோ திருகி அதன் உள்ளேயிருந்து சப்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முயன்றபோது ரேடியோ இறந்து விட்டது. மாமா அன்று அவனைப் பின்னி விட்டார். இவ்வளவு அடி வாங்கி மாலி துடிக்கும்போது சும்மயிருந்த ரேடியோ, மாமா அதன் தலையில் ஒரு தட்டு தட்டி ஒரு குலுக்கு குளுக்கினவுடன் உயிர் பெற்றது. கொரகொர அதிகமாகவே கேட்டது. நான் அதிக நேரம் ரேடியோ பக்கத்தில் ஒரு கும்பலே நெருக்கி அடித்து கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்தது ஜனவரி 30 1948 அன்று. காந்தி இறுதி ஊர்வலம் அநேக திருவாசக தேவார ஆழ்வார் பாசுரங்கள் வயலின் வீணை அழுகை களுக்கு இடையே ஒலிபரப்பின போது. அண்ணல் காந்தி பற்றி அறியாத தெரியாத பருவம் எனக்கு. எனவே அவர்கள் என்ன கேட்கிறார்கள் ஏன் ரேடியோ அழுகிறது என்று தெரியவில்லை. அதன் அழுகை ஓலம் என்னை ஈர்க்கவில்லை.
நான் வாங்கின முதல் ரேடியோ ரீசா என்று கிண்டியில் ஒரு ரேடியோ தொழிற்சாலையிலிருந்து. ரங்கராஜன் என்று ஒத்தைனாடியாக ஒரு மனிதர். நாம் ஏதோ கேட்டால் அவர் எங்கோ யோசித்துக்கொண்டே பாதி பதில் சொல்பவர். அவர் அந்த ரேடியோ கம்பனியின் க்வாலிடி கண்ட்ரோல் பரிசோதனை செய்து ஒரு சிறு காகிதத்தில் கையெழுத்துப்போட்டு ஒவ்வொரு ரேடியோ முதுகிலும் ஒட்டி அனுப்புபவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி படையெடுத்து ஒரு ரேடியோ சல்லிசான விலையில் தரச்சொன்னேன். நூற்று முப்பது ரூபாய்க்கு ஒரு நல்ல ரேடியோ தருகிறேன் வா என்று கிண்டிக்கு தொழிற்சாலைக்கு வரச்சொன்னதால் அங்கே சென்று அவரை பார்த்தேன். என்னை துளியும் கவனிக்காமல் நிற்கவே வைத்துவிட்டு யாரிடமோ பேசிக்கொண்டே சென்று விட்டார். ஆங்கே சிலையானேன். பிறகு வந்தார்.
'நீ 'எப்போ வந்தாய்?''
''குண்டாக வழுக்கை தலையோடு ஒருவருடன் பேசிக்கொண்டே நீங்கள் காபி குடித்தபோது''
''ஒ அவரா. சரி எதற்கு வந்தாய்?''
''ரேடியோ தருவதாக ரெண்டு நாள் முன்பு இன்று வரச் சொன்னீர்கள்.''
''இருக்காதே. சரி எந்த ரேடியோ வேண்டும்?
''நீங்கள் இதோ இந்த மாடல் நல்லது என்று சொன்னீர்கள் என்று அவர் எழுதிக்கொடுத்த ஒரு நம்பரை அவரிடமே காட்டினேன்.''
இடது சுண்டுவிரலால் காதைக் குடைந்து கொண்டே, '' இது இப்போது வருவதிலையே. எதற்கும் பார்க்கிறேன்''
சற்று நேரத்தில் ஒரு அட்டைப்பெட்டியோடு அது வந்தது. ஏகப்பட்ட பார்மாலிட்டி. கடைசியில் பல கைஎழுத்துகள், ரிஜிஸ்டர்கள் அதன் பெயரை எழுதிக்கொள்ள வெளியே தூக்கிக்கொண்டு வந்தேன். அன்றிரவு ரங்கராஜன் வந்து அதைப் பொருத்திகொடுக்க ரேடியோ பாடியது. முதலில் எங்களுக்கு நெல் பயிர் செய்வது எப்படி என்று ஒருவர் சொல்லிக்கொடுக்க, அப்புறம் தெலுங்கில் எங்கோ ஒரு நிகழ்ச்சி, தொடர்ந்து வேறொரு ஸ்டேஷனில் திருப்பி யானைக்கு அரிக்குமா என்று சிலர் தங்களுக்குள்ளேயே பேசுவது கேட்டோம். என் அப்பாவுக்கு ரேடியோ பிடித்து விட்டது. பிபிசி வருமாடா இதில் என்று ஷார்ட் வேவ் ஸ்டேஷன்கள் தேடினார். அலை அலை யாக ஒ வென்ற சப்தம். வெறுத்துப்போய் ''இந்த சனிக்கு எவ்வளவு கொடுத்தாய்?'' என்று திட்டு கிடைத்தது.
அதற்கப்புறம் பல வருஷங்களில் ட்ரான்சிஸ்டர் என்று புதிதாக ரேடியோ உருமாறியது. அதை எல்லோர் வீட்டிலும் விஜிபி போன்ற நிறுவனங்கள் மாதாந்திர தவணையில் கொடுத்தார்கள். அது கொஞ்சம் நன்றாக பாடியது. கொரகொர அப்பவும் சிற்றலை ஸ்டேஷன்களில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் தூக்கிச் செல்லமுடிந்தது. ac dc வால்வ் ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தன. பினாகா கீத் மாலா கேட்டு ரபி, முகேஷ் லதாவெல்லாம் நிறைய அர்த்தம் புரியாமல் இந்தியில் கேட்டிருக்கிறேன்.
பல வருஷங்கள் ஓடிய பின் பாக்கெட் ட்ரான்சிஸ்டர்கள் வர ஆரம்பித்தன. கையில் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பாட்டு கேட்க ஆரம்பித்தோம். ராஜி அத்தையால் இந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. ''அட இந்த பயல் கையிலே ஒரு சின்ன பொட்டியில் தியாகராஜ பாகவதரே பாடுகிறாரே'' என்று அதிசயித்தது ஞாபகம் வருகிறது.
ரேடியோக்கள் டெலிவிஷன் வரும் வரை ஏக போகமாக அரசாண்டன. இன்று அவை தனித்வத்தொடு இயங்க காணோம்.
No comments:
Post a Comment