நம்ம அடுத்தாத்து அம்புஜம் சரியான அலட்டிக்காத 'ஐடம்'! வாழ்க்கையில் ஒரு சிலரே அம்புஜம் போல அவாக் கஷ்டங்களை வென்று சிரித்த முகத்துடன் இருப்பார்கள் , அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டு போவார்கள், " இதுவும் கடந்து போகும்" என்று ! அவளுக்கு இந்தக் கஷ்டங்கள் எல்லாம் வாழ்க்கை எனும் ஒரு புத்தகத்தின் கடினமான பக்கங்கள் ஆகும். இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கைன்னு அம்புஜத்துக்கு நல்லாவேத் தெரியும்.
அது போல இங்கேயும் சிலரை நீங்கள் பார்க்கலாம்.
புத்திசாலி பொன்னுசாமி இருக்கானே, பொறுமை ,நிதானம் இவை இரண்டையும் உப்பு ,புளி ,காரம் போலே புரிந்து கொண்டு வாழ்பவன்.
கண்ணாயிரம் ,கடவுள் எல்லோரையும் ஒரு அர்த்தத்துடன் தான் படைத்து இருக்கான் என்று எடுத்துக் கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்பவன்.
நம்ம பல்டி பாலு போலயும் சிலர் இருக்காங்க, எப்டீன்னா ,அவன் கஷ்டப்படுவதோடல்லாமல் , பிறரையும கஷ்டதுக்குள்ளாக்கி, அடுத்தவர்களையும் ஒரு தண்ட வாழ்க்கை வாழ வைத்துவிடுவான் தன்னோட தண்ட பேச்சால.
முன்னாடி வீடு முனுசாமிக்கோ முணுமுணுக்கவும், குறை சொல்லவும் தான் முடியுமே தவிர நல்ல வழியில் வாழ வழி தெரியாமல் இருப்பான் . இவனுக்கு தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் புரியாது! விதியைக் குறை சொல்லி வாழத்தான் தெரியும். பாதி நிரம்பியுள்ள டம்ளரை அரை டம்ளராவது நிறைந்திருக்கிரதேன்னு பார்க்காமல் அரை டம்ளர் காலியாக இருக்கேன்னு தான் அவர்கள் கண்களுக்குத் தெரியும். நமக்கே எல்லாரும் உதவ வேண்டும் என்றும், அடுத்தவன் அறுந்த விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டாதஜன்மங்களும் இவனைப் போல இருக்குதுகள் லோகத்தில!
முன் ஜாக்கிரதை முத்துசாமியோ இப்படிப் பட்டவர்களுடைய சகவாசமேத் தேவை இல்லைன்னு , அவர்களைத் தும்பு தட்டராமாதிரி தட்டிட்டுப் போயிண்டே இருப்பான். ஒருவேளை இவர்கள் அருகில் போனா புதை மணல் போலே, அருகில் வருபவர்களையும் இழுத்து விடுவார்களோன்னு தள்ளியே போறவன்.
நா என்ன சொல்றேன்னா இந்த மாதிரி பூச்செடிகளுக்கு நடுவில் வளரும் புல் போலே, நிறைய பேர் வரத்தான் செய்வார்கள் அவர்களை எடுத்தெறிவது தான் நல்லது!
இன்பம் அவரவர்கள் தன்னிடமே தேடித் பார்த்தால் கிடைக்கும் வெளியே போய் தேட வேண்டிய அவசியம் இல்லை.
No comments:
Post a Comment