Friday, October 28, 2011

என்ன கொடுமை இது ?

விதவைன்னாலே உலகம் முகம் சுளிக்கும் ! ஏன் அது?
விதவைகள் என்ன பாவம் செய்தார்கள்?இங்கே நான் அவர்களுக்கு என்ன என்ன கொடுமை நடக்கிறது என்று சொல்லப் போவதில்லை. ஏன் கொடுமைப் படுத்தணும் என்று தான் கேட்கப் போகிறேன்.

முதலில் மரணம் என்று பார்த்தால், நியாயப் படி வயது காரணமாகத்தான் மரணம் நிகழ்கிறது, ஆக பெண்ணைதேடும்போதே வயது வித்யாசத்தில் பார்க்கிறார்கள், இயற்கையாகவே , மனைவி நிச்சயம்  கணவனை விட அதிக நாட்கள் உயிர் வாழ்வாள். அப்போ தப்பு யார் மேல்? பெண்ணே மனது விரும்பி வயசு அதிகமாகத் தேடுவதில்லையே?
முதல் தவறு இங்கே.

அடுத்தது  குருவி தலையில் பனங்காயாக வீட்டு சுமை அதிகம் அவளே சுமக்கனும், ஆண்கள் வெறுமே  தினசரி படித்துக் கொண்டு , முடிந்த பொது கைகால்களை அசைத்து அதிகாரம் செய்தே பழகி, உடம்பை வளர்த்துக் கொண்டு சுகர் ,பிபி  ,உடல் பருமன் காரணமாக நோய் வாய் பட்டும் முக்தி அடைகிறார்கள். இயற்கையே பெண்களுக்கு தாங்கும் சக்தி அதிகம் கொடுத்து  விடுவதால் அவர்களால் நோயை எதிர் கொள்ள முடிகிறது. 

மனைவியே எப்பொழுதும் கணவனுக்காக விரதம், நோன்பு, பூஜை செய்யவேண்டும் ஆனால், ஆண்கள் மனைவிக்காக ஒரு விரதமோ, பூஜையோ செய்வது கிடையாது, அது ஏன்? கணவனுக்காக எல்லாம் மனைவி செய்யணும் ஆனால் கணவன் இறந்தால், மனைவி தான்  காரணம் ஏன்? இது எப்படி செல்லுபடியாகும்?

அவரவர்கள் பிறக்கும் போதே பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு தான் வருகிறோம் அப்படி இருக்க, ஒருவர் சாவதற்கு மற்றொருவர் எப்படி காரணமாகலாம்?இது ஏன் உலகத்திற்கு புரிவதும் இல்லை, தெரிவதும் இல்லை?

அது வரை தன் பசங்களுக்காக எல்லாம் செய்தவள், கணவனைப் பறிகொடுத்த ஒரே காரணத்திற்காக , நாள் கிழமைகளில் அதுவும் தான் பெற்றெடுத்த குழந்தைகளின் நல்ல நிகழ்சிக்களுக்கு  முன்னின்று எதுவும் செய்ய முடியாதப் படிக்கு இந்த மூட சமூதாயம் குறுக்கே நிற்கும். இது ஏன்?அவளே அவள் குழந்தைகளுக்கு வேறு  ஒரு அந்நியன் மூலமாக நல்லதை செய்யவேண்டும், அப்பொழுது அவள் மனம் என்ன பாடு படும் என்று யாராவது யோசித்திருப்பார்களா ?

அதே மாதிரி அவள் அழகாக பொட்டிட்டு, பூவைத்துக் கொண்டால் என்ன குறைந்து போகும்?கணவன் வரும் முன்னாலே அவள் பூவையும் பொட்டையும் பார்த்தவள்  தானே? இது என்ன புதுசாக  ஒரு தடை?

தாலி என்பது பின்னால் வந்தது , மனசில் தான் வாழ்க்கை, தாலி வேணுமானால் ஒரு சமூக அங்கீகாரம் கொடுக்கலாம், ஆனால் அந்த அங்கீகாரம் கொடுக்க வேண்டியது இந்த கேடு கேட்ட சமூகமே?

 ஒரு பெண்ணை பூவும் பொட்டோடும் வெகு வருடம் பார்த்து விட்டு சடாரென்று பாழும் நெற்றியுடனும் , ஒரு காய்ந்த சருகு போல் பார்க்க ஏனோ மனசு விரும்புவதும் இல்லை, ஒப்புக் கொள்வதும் இல்லை.

இந்த இரண்டும் கேட்டான் சமூகம் வெறும்வெள்ளித்  திரையிலும்  டிவி சீரியல்களிலும்  மட்டுமே விதவையை ஒரு கல்யாணக் கோலம் மாதிரி சண்டப் போட்டு, விபூதிப் போட்டு, நிறைய நகை நட்டுகள் பட்டுப் புடவை சகிதம் காண்பிக்கிறார்கள் , அதயே நிஜ வாழ்க்கையில் ஒரு விதவை செய்தால் அதை அங்கீகாரம் செய்வதில்லை? 

என்னுடை வாழ்க்கையில்  விதவை, சுமங்கலி, கன்னிப் பெண், என்று எந்த வேறுபாடோ, பாகு பாடோ இல்லாமல் நாள் கிழமைகளுக்கு ஒருமித்து அனைவரையும் அழைத்து வெற்றிலை பாக்கு கொடுத்திருக்கேன், ஏன் என்றால் என் மனதுப் படி எல்லோருமே கடவுளின் அம்சம் படைப்புகள்,அல்லாமல், நாள் கிழமை என்பது கடவுளின் திருவிளையாடலே! அவர்களுக்கும் அதில் பங்கேற்க உரிமை உண்டு. 
முதன் முறை என்னுடன் வேலை பார்த்த அப்பொழுதே விதவை யான வேறு மதப் பெண்மணி, நான் அவளை வரலக்ஷ்மி  விரதப்பூஜைக்கு அழைத்த போது, என்னை ஒருக் கேள்விக் குறியுடன் பார்த்தாள். பார்த்ததோடல்லாமல் கேட்கவும் செய்தாள்.

"நீ எப்படி என்னை அழைக்கிறாய், நான் தான் விதவை  ஆயிற்றே? நீ வேறு பிராமின் ஆச்சே?"
"அதற்கு நான் சொன்னேன், நீ விதவையாக இருக்கலாம், ஆனால் இந்த அழைப்பு லக்ஷ்மி பூஜை முன்னிட்டு , நீ தாராளமாக வந்து தரிசனம் செய்யலாம், ஆண்டவன் சந்நிதானத்தில் எல்லோரும் ஒன்றே  "

என்னை சுற்றி இருந்த அதே மதப் பெண்களுக் கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது , அவர்கள் என் பதிலை எதிர் பார்க்க வில்லை .இன்று வரை நான் மதம் பார்ப்பதில்லை . வந்திருந்த அனைவருக்கும் வெற்றிலை பாக்கு , மஞ்சள் கொம்பு, ரவிக்கைத் துணி கொடுத்தேன் . ஆனால் இந்த கலீகுக்கு மட்டும் மஞ்சளை எடுத்து விட்டுக் கொடுத்தேன். அது அவளுக்கே தெரிந்திருக்காது, நான் சொல்லவில்லை என்றால்.

சமீபத்தில் நவராத்திரியின் போது என்னுடைய  தெலுங்கு 'நெய்பர்' பாட்டி சமீபத்தில் அதாவது பெப்ரவரி மாசம் கணவனை இழந்தவர் , எங்கேயும் யார் வீட்டிற்கும் போகாதவர் , அந்த காலத்துப் பெண்மணி.

நவராத்திரிக்கு அவருடைய மருமகளிடம் பாட்டியையும் வெற்றிலை பாக்குக்கு அழைத்துக் கொண்டு வரச் சொன்னேன்.. மருமகள் மட்டுமே அவள் ஆறு வயசுப் பெண், இருபது வயசு மருமாளுடன் வந்தாள். 
நான் பாட்டி ஏன் வரவில்லை என்று கேட்ட பொழுது , மருமகள் மென்னு முழுங்கினாள். என் வீட்டிற்கும் அவர்கள் வீட்டிற்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தான்., அவர்கள் கதவும் திறந்து தான் இருந்தது .கரண்டும் இல்லை .ஆனால் என் வீட்டில் பவர் பேக் அப் இருந்ததால் , ஒருப் பிரச்சனையும் இல்லை. இவர்களை உட்காரவைத்து விட்டு , நானே போயி பாட்டியுடன் தமிழிலேயே வெத்திலைப் பாக்குக்கு வருமாறு கூறினேன், அவர் "வேண்டாம் நான் வரவில்லை "என்றார்.
அதற்கு நான்," அதெல்லாம் கிடையாது, நீங்கள் என் அம்மா மாதிரி யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் , நீங்கள் வந்தே ஆகணும்" என்றேன்.

அப்படியும் பாட்டி பிடிக் கொடுப்பதாக இல்லை. அதனால், நானே அவர்களை பலவந்தமாக கைப் பிடித்து என் வீட்டிற்கு அழைத்து வந்தேன் . பாட்டியின் கண்ணில் கண்ணீர்! என்னை அப்படியே கட்டி அணைத்து திருஷ்டி கழித்தாள். எவ்வளவு மனசு வருந்தி இருந்தால் கண்ணில் கண்ணீர் வரும்? அவருடைய  இந்த  நிலைமைக்கு யார் காரணம் ? யாரிடமாவது விடை இருக்கா? 

நம் வீட்டிலே அப்படி நடந்தால் நம்மால் சும்மாப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நான் பாட்டிக்கு, வெத்திலை பாக்கில் , ரவிக்கைத் துணி, ஒரு பர்ஸ்  வைத்துக் கொடுத்தேன் . அவரும் நம் உறவினரே, இந்த நிலைமை எல்லோருக்கும் அதுவும் பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு , அதற்கான ஆரம்பமும் மருந்தும் நம்மைப் போன்ற பெண்களிடம் தான் இருக்கு . அதை என் நாம் செயல் படுத்தக் கூடாது?

சுபஸ்ய சீக்ரம் 

பின் குறிப்பு  :
மங்களூர் பக்கம் விதவைகளை வைத்து தேர் இழுத்து பூஜை செய்ய வைக்கிறார்கள் என்று பேப்பரில் படித்தேன், படிக்கவே மனசுக்கு நன்றாக இருந்தது வாழ்க  மனசு மாறிய சமூதாயம் 

1 comment:

  1. Posted by: prana
    On: 2nd February 2012 03:39 PM

    மாதங்கி மேடம்,
    நாலு நல்லது இருந்தால் நாற்பது கெட்டது கொண்டது இந்த சமுதாயம்..என்ன செய்வது..
    கெட்டதை புறங்கையால் தள்ளிவிட வேண்டியதுதான்..இதுப் போன்ற பத்தாம்பசிளித்தனத்தைக் கண்டிப்பாய் வேரோடு அழிக்க வேண்டும்..இனி வரும் சமுதாயம் கண்டிப்பாய் அதை நிகழ்த்திக் காட்டும்..

    ReplyDelete