கேதர்நாத் கோயிலுக்கு ஒரு புனித யாத்திரை
இமய மலை தொடரில் அதிகமான சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களை கொண்ட இடமென்றால் அது உத்தரகண்ட் மாநிலம் தான். இங்கு முசோறி, நைனிதால், ஜிம் கார்பெட் தேசிய உயிரியல் பூங்கா, மலர்களின் பள்ளத்தாக்கு போன்ற இயற்கையின் பேரழகு மிக்க சுற்றுலாத்தலங்களும், பத்ரிநாத், ரிஷிகேஷ், கேதர்நாத் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களும் இருக்கின்றன.
இந்த கோயிலுக்கு போனால் நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்!
இங்கே ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் புனித யாத்திரை வரும் கோயில்களில் ஒன்றான கேதர்நாத் கோயிலை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், அதனை எப்படி சென்றடைவது என்பது பற்றிய பயனுள்ள தகவல்களையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பிரம்மாண்டம்.... பாதியில் நிறுத்தப்பட்டதன் மர்மம்?
பஞ்ச பாண்டவர்களால் 3000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பின்னர் எட்டாம் நூற்றாண்டில் இந்திய தேசத்தில் வாழ்ந்த ஆகப்பெரிய ஆன்மீக குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் புனரமைக்கப்பட்ட பெருமை வாய்ந்த கோயில் தான் இந்த கேதர்நாத் ஆகும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் இமய மலையின் மேல் மந்தாகினி நதியின் கரையில் இந்த கேதார்நாத் சிவன் கோயில் அமைந்திருக்கிறது.
இக்கோயிலானது மேன்மைபெற்ற சிவாலயங்களாக சொல்லப்படும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதன்மையானதாக திகழ்கிறது.
இங்கு நிலவும் கடுமையான தட்பவெட்ப நிலையின் காரணமாக ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா நாளில் துவங்கி நவம்பர் மாதத்தில் வரும் கார்த்திகா பௌர்ணமி நாள் வரை மட்டுமே இக்கோயில் பக்தர்களுக்காக திறந்திருக்கிறது.
கடுமையான தட்பவெட்ப நிலையினால் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்கள் கேதர்நாத் கோயிலின் மூலவர் சிலையும், இக்கோயிலுக்கு அருகில் இருக்கும் மத்ய மகேஸ்வர் கோயில் மூலவரின் சிலையும் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் இருக்கும் 'உக்ஹிமாத்' என்ற இடத்தில் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன.
மத்ய மகேஸ்வர் கோயில்
கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 11,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலை நேரடியாக சென்றடைய சாலை வசதி ஏதும் இல்லை.
கௌரி குண்டு என்னும் இடத்தில் இருந்து 14 கி.மீ கடுமையான மலைப்பாதையின் வழியே நடந்து தான் கேதர்நாத் கோயிலை அடைய முடியும்.
கேதர்நாத் யாத்திரையின் 'பேஸ் கேம்ப்'-ஆக இருக்கும் கௌரி குண்டு என்ற இடமும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமே. இங்கு தான் பார்வதி தேவி வாழ்ந்து வந்ததாகவும் அவர் சிவபெருமானின் விருப்பத்தை பெற வேண்டி கடுந்தவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் த்ரியுகி நாராயண் என்ற கோயிலில் தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இக்கோயில் இங்கே உருவானதின் பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுகிறது.
மகாபாரத யுத்தத்தில் தமது உறவினர்களான கௌரவர்களையும், குரு தேவரான துரோணர் மற்றும் பாட்டனாரான பீஷ்மர் ஆகியோரை வதைத்த பாண்டவர்கள் அந்த பாவத்தில் இருந்து விமோச்சனம் பெற சிவபெருமானின் தரிசனம் இமய மலைக்கு வருகின்றனர்.
இங்கே அவர்களை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு எருதாக மாறி பாண்டவர்களை அலைகழிக்கிறார். ஒருகட்டத்தில் துரத்தி சென்று எருதாக உள்ள சிவபெருமானை பீமன் அடித்து விடுகிறார்.
பீமன் அடித்த பிறகு எருது மறைந்து ஒளி வெள்ளத்தின் ஊடாக சிவபெருமான் தோன்றி பாண்டவர்களுக்கு காட்சி தருகிறார்.
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்த சிவபெருமான் 'தான் இந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக வீற்றிருந்து என்னை தரிசிக்க வரும் பக்தர்களை அவர்களின் பாவங்களில் இருந்து விமோச்சனம் அளிப்பேன்' என்று கூறியதாக புராண குறிப்புகள் இருக்கின்றன.
இந்த கேதார்நாத் கோயிலின் உள்ளே பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரின் சிலைகளும், கிருஷ்ணர், திரௌபதி, நந்தி மற்றும் சிவ பெருமானின் பாதுகாவலர்களில் ஒருவராக சொல்லப்படும் வீரபத்திரர் ஆகியோரின் சிலைகளையும் நாம் காண முடியும்.
இக்கோயில் திறந்திருக்கும் ஆறு மாத காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
இந்த கேதர்நாத் கோயிலுக்கு வெகு அருகிலேயே தான் இப்போது நாம் காணும் கோயிலை நிர்மாணித்த குரு ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அமைந்திருக்கிறது. ஹிந்து தர்மத்தை பின்பற்றும் எவரும் கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய இடமாகும் அது.
இங்கே கோயில்களை தவிர சுற்றிப்பார்க்க கேதர்நாத் உயிரியல் சரணாலயம் ஒன்றும் இருக்கிறது. அற்புதமான இந்த சரணாயலத்தில் நாம் பல்வகை பறவைகளையும், விலங்குகளையும் கண்டு மகிழ முடியும்.
கேதார்நாத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ் எனும் இடத்தில் உள்ளது. இது கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேதார்நாத் செல்ல பிரிபெய்டு டாக்சிகள் இயக்கப்படுகின்றன. 207 கி.மீ தூரத்தை டாக்சி மூலமாக கடந்தபின் 14 கி.மீ தூரம் கால்நடையாக யாத்ரீகர்கள் கேதார்நாத்துக்கு ஏற வேண்டியிருக்கும்.
நன்றி...!
No comments:
Post a Comment