Wednesday, December 17, 2014

மார்கழி விருந்து

அக்கார வடிசல்   - தடா  1

மார்கழி இன்று முதல் துவங்கிவிட்டது. இந்த  மகத்தான  மாதத்தில்  ஸ்ரீ  ஆண்டாள் பற்றிய  ஒரு  சிறு  தொகுப்பை  போன  மார்கழியிலே  பாவையும்  பரமனும்  என்று  இலவச  புத்தகமாக   குழந்தைகளுக்கு வழங்கினோம்.   இந்த  வருடமும் யாரேனும்  இந்த  வெளியீட்டின்  பிரசுர  செலவை ஏற்க  முன்வந்தால்  மேலும்   சில பள்ளிகளுக்கு     முடியும்.  விருப்பமுடியவர்கள்  தெரியப்படுத்துங்கள். 120 பக்கங்கள் கொண்ட புத்தகம் படங்களுடன்.

 நம்மில் யாருக்கேனும்  நமது தேசம் ஒரு புண்ய பூமி தான்  என்பதில்  துக்குணியூண்டேனும்  சந்தேகம்  இருக்குமானால்    கொஞ்சநாள்  பாகிஸ்தானிலோ இரான்  இராக்கிலோ  அல்லது எங்கோ ஒரு  நாட்டில் இருந்து விட்டு  மீண்டும் இங்கே வரவும்.   யாரும் சொல்லாமலே  தானே தெரியவரும்.    இந்த புண்ய தேசம் இவ்வாறு  பரிமளிக்க யார்  காரணம், எது  காரணம்?  வாழ்ந்த நம் மூதாதையரும்,  வணங்கிய தெய்வங்களும்,  நலமோடு வாழ வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும் தான்.  இயற்கையோ  அன்று போல்  இன்றும்  இருக்கிறதே தவிர  அதை வெறுத்து சின்னா பின்னமாக்கி  நாகரிகம் என்ற  போர்வையில்  நாமே உண்டாக்கிக்கொண்ட குளிரில்  வாடுகிறோம்.

பின்னோக்கி செல்வோம். பண்பையும்  பக்தியையும்  ருசிப்போம். குளிர்  என்று  சொன்னவுடனே  மார்கழி கவனத்துக்கு வருகிறதே .மார்கழி  என்ற வுடனேயே  என்ன  தோன்றுகிறது  ''மார்கழி திங்கள் என்ற பாடல்  மட்டும்  போதும்,  மடி நிறைய பொங்கல்   வேண்டாம்.    ஒரு தொன்னையே  போதும்.  பிரசாதம்  உணவல்ல. இறை  அருள்   பெற  விழைய, ஒரு  தூண்டு கோல்.

மார்கழியை  மணக்க வைத்த  மா  மனிதை  ஆண்டாள்.  பன்னிரு  ஆழ்வார்களில்   ஒரே பெண். எட்டாம்  நூற்றாண்டில் வாழ்ந்தாலும் எட்டிய தூரத்தில் என்றும் நம்  கண் முன்னே  நின்று, மனத்தை  ஆக்ரமிக்கும்  பெண்   தெய்வம். பெருமாள்  இருக்கும்  இடமெல்லாம்  ஒரு  சந்நிதியில் தானும் நமக்காக  அருள்பவள். மூன்றாயிரம்   ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்தாள்  என்றும்  சொல்கிறவர்களும் உண்டு.  கண்ணன் இருந்த காலத்தில் தானும்   வாழ்ந்ததாக தானே  ஒரு  காட்சி அமைத்து  மனத்தில்  வாழ்ந்து நம்  மனத்தில்  இடம் பிடித்தவள்  ஆண்டாள்.  வில்லிப்புத்தூரில்   ஆடிப்பூரத்தில் துளசியோடு  துளசியாக  பெரியாழ்வார் கண்டெடுத்த,  அவதரித்த, கோதை  எனும்  பெயர் பெற்றவள்.

அரங்கனுக்கு, ரங்க மன்னாருக்கு   பூச்சூட   ஒரு பெரும் நந்தவனமே  வளர்த்த பெரியாழ்வார்  தனது வழியிலேயே சுடர்க்கொடியை  வளர்த்தார். தமிழ்  கலந்த  பக்தியை வளர்ப்பு மகளுக்கு  ஊட்டினார். தேனிலே  ஊரினவள் தேனான   பாசுரங்களை  இயற்ற வழிகாட்டினார்.  தனக்குத்  தெரிந்த    சாஸ்திரம், வேதம்,பக்தி  மார்க்கம், தீஞ்சுவைத் தமிழில் கலந்து  அவளைப் பக்குவப் படுத்தினார்.   திருப்பாவை  பிறந்தது.

திருப்பாவை 30 பாசுரங்களையும் கோதைநாச்சியார் எழுதியபோது  தன்னை கண்ணன் ஆயர்பாடியில்  இருந்த காலத்தில்
அந்த  ஊர்  சிறுமிகளில் ஒருவளாக  உருவகப் படுத்திகொண்டு அந்த  இடைச்சிறுமிகளோடுபாவை நோன்பு நோற்றபோது அவள்  கிருஷ்ணனின் பெருமையை  உணர்த்தியதிற்கு ஈடு இணை இல்லை.

மார்கழி 30 நாளும் ஒருநாளைக்கு ஒன்றாக  அந்த பாசுரங்களை  தொடர்  நிகழ்ச்சியாக தொகுத்து அந்த சிறுமியர்களின்  பேச்சு வாயிலாக  திருப்பாவை பாசுரங்கள்  இந்த குட்டி கதைப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இதைக் கையாண்ட விதத்தை பற்றி  சொல்லும்போது ஆண்டாள்   என்பவள் ஆயர்பாடி  இடைச்சிறுமிகளில்  ஒருவளாகவும் அதே நேரம்  வில்லிப்புத்தூரில்  சிறந்த விஷ்ணு பக்தர், பெரிய ஆழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணு சித்தர் கண்டெடுத்த வளர்ப்பு மகள்  கோதையாகவும்  ஒரே  சமயத்தில் அறிமுகமாகிறாள்

மார்கழி 1ம்   நாள் ''

''ஏம்மா   குழந்தை வழக்கத்தை விட  சீக்கிரமே   எழுந்துட்டே.?  உன்னுடைய  திவ்ய  குரல்லே  நீ பாசுரங்கள்  பாடும்போது   என்னை   ஸ்ரீ  வைகுண்டத்துக்கே   கொண்டு  சேர்க்கிறதம்மா''.

விஷ்ணுசித்தர்  என்கிற பெரியாழ்வார் குரல்  தழுதழுத்தது.

''அப்பா எல்லாம் நீங்க  கத்துக்கொடுத்தது தானே.   எனக்கு  நீங்க  இல்லாவிட்டால்  இதெல்லாம்  வருமா அப்பா.  அரங்கனை அறிமுகப்படுத்தியதே  நீங்கதானே.  காரணமே  நீங்க தானே.  என்  ரங்கனை பத்தி  பாட தோண  வச்சதே நீங்க தானேப்பா?

''ஆமாம்  தாயே,   நான்   செஞ்ச  பெரிய பாக்கியம்  உன்னை அடைந்தது.  உன் மூலமா  அந்த  ரங்கனை   நினைக்கிறது, அவனைப் பத்தி பேசறது,  பாடறது எல்லாம்.   இப்படியே  என்  வாழ்நாள் பூரா போகணும்னு  தோணறது அம்மா.  இப்பல்லாம்   நீயே எழுத்தாணி  பிடிச்சு   ஓலைச்சுவட்டிலே நிறைய  எழுத  ஆரம்பிச்சுட்டே.  ரொம்ப  சந்தோஷம் தாங்கலை  எனக்கு.''

''நிறைய  எழுத  மனது துடிக்கிறது  அப்பா.  ஒண்ணை  நினைச்சு   எழுதறத்துக்குள்ளே அதைக்காட்டிலும்  அருமையா   வேறே ஒண்ணு மனசுக்குள்ளே ஒடரதாலே  முதல்லே  நானே  அதை பாடிப்பார்த்து  அனுபவிச்சுக்கிறேன்.''   

'ஏன்  எழுந்துட்டே ன்னு  கேட்டேளே. வாசலைப் போய்  பாருங்கோ,  பெருக்கி, சாணம்  தெளிச்சு,மெழுகி,  பூ செருகி  பெரிய   கோலம் போட்டிருக்கேன், '' ரங்கா வா'' என்றும்  எழுதி இருக்கேன்''

 ''மார்கழி மாசம்.  பிரம்ம  முகூர்த்தத்திலே  சகல தெய்வங்களும்  பூமிக்கு வரா  அம்மா.  நீ  வான்னு எழுதி  கூப்பிடறத்துக்கு முன்னாலே  உன் குரல் கேட்டே   ஓடி  வருவான்,  அந்த  ரங்கன்,   எனக்கு தெரியாதா?  நீ என்ன  புதுசா பாடினே?''

 ''அப்பா,  மார்கழிலே விடியறதுக்கு  முன்னே  எழுந்து  நீராடி  விரதமிருந்து   முப்பது நாளும்  அந்த நாராயணனையே  நினைத்து நோன்பு   நோற்றால்  அந்த  ரங்கன்  வேண்டியதை  தருவான் என்கிறதாலே  எனக்கு அவனே  வேண்டுமென்றே   இந்த  முப்பது நாளும்  நோன்பு நோக்கறேன்.  அந்த  மாய கிருஷ்ணன்  இருந்த  ஆயர்பாடியிலேயே நான்  இருக்கிறதா   மனசாலே அங்கே போய்  மீதி  பெண்களோடு சேர்ந்து  கொண்டு அவர்களில் நானும்  ஒருத்தியா  அங்கே  ஒரு ஆண்டாள் ஆகிட்டேன் பா.   நான்  உடம்பிலே  இங்க  இருந்தாலும்  மனத்திலே  கிருஷ்ணன் வீட்டையே    சுத்தி சுத்தி  வரது  தான்   ரொம்ப  சந்தோஷமாக  இருக்கு  அப்பா. ''

''என்ன  எழுதினே படியேன் கேக்கறேன்.  கண்ணு  சரியா தெரியலை.  ஓலைச்சுவடு படிக்க வெளிச்சம் போறலே.''
++++

கோதை ஆயர்பாடி  ஆண்டாள் ஆகிவிட்டாள்   மார்கழி மாதம்  குளிர்.  யமுனை உறங்குவது போல் அமைதியாக  இருக்கிறது. அதை  எழுப்புகிறாள்   ஆண்டாள்.  முதலில்  தூக்கம் கலைந்து  எழுந்தவள் தன குடிலை விட்டு  வெளியே  வந்தாள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
     நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
     கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
     கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
     பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


கணீரென்று  கோதையின் குரலில் திருப்பாவை தோன்றியது.  விஷ்ணு சித்தர்  கண்களில்  நீர் மாலை.
''அசாத்யம்,  ஸ்ரீயப்பதே,  ரங்கநாதா,  எல்லாம்  உன்  கிருபை.  என்ன  அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ச்ரத்தை.  இவ்வளவு  காலம்  நான்  எழுதியதெல்லாம்  இந்த  ஒரு பாசுரத்துக்குஅம்மா  தாயே, கோதை,  நீ   லக்ஷ்மி அம்சம்  என்பதில்  சந்தேகமே. என்ன  திவ்யமாக  எழுதியிருக்கிறாய். நான் எழுதினத்துக்கேல்லாம் சிகரமாக  உன்  எழுத்தில் மிளிர்கிறதே. எல்லாம்  அந்த  ரங்கன் செயல்.

 நாளைக்கு  நீ   எழுதப்போவதையும்  ஆவலாக கேட்க காத்திருக்கேன். 

''ஓவ்வொரு நாளும்  பாசுரம்  எழுதப்போறேன்.  நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த  நாராயணன் அவதாரமான  கிருஷ்ணன் இருந்த  ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில்  நீராடி நல்ல  கணவன் கிடைக்க  காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும்  எழுதப்போகிறேன்.

 +++
 வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தரை  விட்டுவிட்டு  ஆயர்பாடிக்கு  செல்வோமா?  அங்கு சில  பெண்கள்  விடியற்காலையில்  கூடியிருக்கிறார்கள்.  மற்றும்  சிலரை எழுப்ப செல்கிறாள்  ஆண்டாள் என்கிற சிறுமி. '
''மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா.  நாம் எல்லாருமாக  யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ கிருஷ்ணனைப் பணிவோம்.  அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள. தோழியர்களே  எழுந்திருங்கள்.
''என்னடி ஆண்டாள் , இந்த  மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி வா குளிப்போம், பாடுவோம் என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொல்லேன்?  என்றனர்  அந்த  ஆயர்பாடி சிறுமியர் அவளிடம். அவள் சொன்னாள்:

''நான் சொல்றேன் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு விஷயம்  தான் சொல்வேன். அப்போதான்  உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியும். ஒரே அடியா  ஒரு மாச விஷயத்தை  ஒரே நாளில்  சொல்லித்  திணிக்கக்  கூடாது. இன்னிக்கு மார்கழி 1ம்  நாள் 

"இந்த  மார்கழி  என்கிற  மாசம் ரொம்ப  ஒசத்தியானது.எனக்கென்னமோ  இந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது. தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த  ஊர் என் உயிர். ஏன் என்றால்  இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆண்அழகன்   கருநீல வண்ணன் செவ்விதழ், கன்னம் உடையவன்--கண்களோ செந்தாமரை அவன் இருக்கும் நம்முடைய இந்த  ஆயர்பாடி, ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!. அவன் சாதாரணமானவனா யிருந்தால்  இந்த பேச்சுக்கே  இடமிலையே! எதிர்த்தவர்களின் உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையை தவிர வேறு யார்?  அவன் தாய் பற்றி  சொல்ல வில்லையே, இந்த  சிங்கக்குட்டியை  பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை அவள்  பேர்.

''நேரமாச்சே  சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து  அவனை பாடுவோம்,

''ஆண்டாள்  கொஞ்சம்  விவரமாத்தான்  சொல்லேன்  அப்படி என்ன  இதுக்கு முக்கியம்?''

'' எதற்காக இந்த  மார்கழி மாதம்  நோன்பு என்று தெரியணும் என்றால், இந்த  மாசம்தான்  அந்த கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு  பிடிச்ச மாசம். மாதங்களில் அவன்  மார்கழியாகவே இருக்கானாம்.  நாமெல்லோரும் ஏன்   இந்த உலகில் எவருமே ஸ்வர்கமடைய நாம் செய்யும்  இந்த பாவை நோன்பு  தவிர  குறுக்கு வழி வேறே இல்லை அல்லவா?''
பெண்கள்  ஸ்நானம்  முடித்து  கூட்டமாக  சேர்ந்து   நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத்தொடங்கினர். பிறகு  தத்தம்  வீடு திரும்பினர்.  

மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர்  சென்று ஆண்டாளை  தரிசனம்  செய்ய இயலுமா?  சென்னை வாசிகளே! திருவல்லிக்கேணி தான் சென்னையின்   வில்லிப்புத்தூர்.  அங்கு மார்கழி முழுதும்  கோலாகலமாக   விமரிசையாக ஆண்டாள்  நீராட்டு விழா, பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம  முகூர்த்தத்தில் திவ்ய தரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே.  கிளம்புங்கள் எல்லோரும் உடனே  போவோம்

No comments:

Post a Comment