Thursday, December 18, 2014

அக்கார அடிசல் தடா 3 -

 உலகளந்த  உத்தமன்

மார்கழி பிறந்து  இன்று மூன்றாவது நாள்.   ஏற்கனவே  அமைதியான  அந்த  கிராமம் மார்கழி  குளிரிலும்   சில்லென்ற காற்றிலும்,  அந்த  வில்லிப்புத்தூரை  உறங்க வைத்திருந்தாலும்  அந்த  சிறிய  ஆஸ்ரமம் மட்டும்  தீபத்தின் ஒளியை சிறிதாக வெளியே  கசிய விட்டுக்கொண்டிருந்தது.  காற்று என்னவோ அன்று கொஞ்சம் பலமாகத்தான் வீசியது. மரங்கள் செடி கொடிகள் சல சல என்ற சப்தத்தில் ஒலித்துகொண்டு  தலையாட்டின.

விடியல்  காலை,  இருட்டு  இன்னும்  நீங்கவில்லை.  சூர்யோதயத்துக்கோ  அருணோதயத்துக்கோ  இன்னும்  நிறைய  நேரம் இருக்கிறதே.  ஒரு சில  தூக்க  மில்லாத பறவைகள்  குளிரை  லட்சியம் பண்ணாமல் வினோத ஒலி  ஜாலம் செய்துகொண்டிருந்தன. கோதை  விஷ்ணுசித்தரை  கவனித்தாள்.  ஏன்  எழுந்து  உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்? 


''ராத்ரி முழுக்க தூக்கம் வரவில்லையம்மா''

'' ஏன் பா?''

''இன்னிக்கு  என்ன பாசுரம்  எழுதப்போறே,  அதைக் கேக்கவேண்டும்  என்கிற  ஆவல், எப்போ  பொழுது விடியும்  என்று காத்துக்கொண்டிருந்தேன்  தாயே. அந்த  ஜெகன்னாதனைப் பத்தி இன்னிக்கு  என்னம்மா நீ  எழுதுவே,  அதை என்னமா எழுதப்போறே என்கிற ஆவல் தான்.''

'''அப்பா இன்னிக்கு  எழுதவேண்டியதை  ராத்திரியே  முடிவு பண்ணி  எழுதி வைச்சுட்டேன்.  இதோ வாசல் அலம்பி கோலம் போட்டுட்டு வந்து படிக்கிறேன்.''

விளக்கைத் தூண்டி விட்டு  அவள்  எழுதி வைத்திருந்த  ஓலைச்சுவடியை  எடுத்து  கையில் வைத்துக்கொண்டு  விஷ்ணு சித்தர் கோதைக்காக  காத்திருந்தார். நாமும் காத்திருப்போம்

கோதை அமர்ந்தாள் '' பாடும்மா,  உன் குரல்லே கேட்கும்போது  காதுக்கு  கர்ணாம்ருதமா  இருக்கும்மா ''

அவள் தேனினும்  இனிய குரலில் முழுப்பாசுரமும்  பாடினாள்

''ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
         நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
         ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
         தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

விஷ்ணு சித்தர்   ஆனந்த  பாஷ்பம் நிறைந்து கடைவிழியிலிருந்து  கன்னத்தில் வழிய  தழு தழுத்த குரலில்  ''கோதை , என் கண்ணே, என்ன  அருமை,  என்ன கற்பனையடி  உனக்கு,  அபூர்வம்  அபூர்வம் '' என்னும்போது  ஆண்டாளின் காதில்   அவை விழவில்லை.  நேரே  பார்த்துக்கொண்டு  சிலை போல் அமர்ந்திருந்தாலும்  அவள்  ஆயர்பாடியில்  தான்  இருந்தாள் .   நாமும் அங்கேயே  செல்வோம். ஆண்டாளை  இன்று  பார்க்கவேண்டாமா?

 +++++

'' அப்படியென்ன அந்த  நாராயணன்  பெரியவன்.  சொல்றேன்,   என்று  சொல்லிவிட்டு நீ போய்விட்டாய்.  நீ சொல்வதெல்லாம்  எங்களுக்கு புதிதாகவும்,   சந்தோஷமாகவும்  ஆர்வமாகவும் உள்ளது.   இந்த மழையில்   நனைந்துகொண்டே  நாம்  யமுனை ஆற்றுக்குப்  போவதற்குள்  சொல்லேன்.  கேட்டுக்கொண்டே  போவோம்.    ஆண்டாளின் வாயைப்   பிடுங்கி  அவள்  தோழிகள்  என்ன  தெரிந்துகொண்டனர்:

"ஆமாம்.  அந்த  நாராயணன்  ரொம்ப பெரியவனாயிருந்ததால் தான்  இந்தஉலகம், மேல்  உலகம்,  ரெண்டையுமே, ரெண்டு கால் அடி வைத்து அளந்தவன் ,  மூணாவது  அடி மண்ணுக்கு கால் எங்கே  வைக்கிறது  என்று  மஹாபலி ராஜா தலையிலேயே வைத்தான்  என்று  பாட்டி கதை  சொல்வாளே. அதனாலே தான் அவ்வளவு பெரிய அந்த  நாராயணன் நமக்கும்  அருள  வேண்டும் என்று  நாம்  இந்த நோன்பு விரதமெல்லாம் இருக்கப்  போகிறோம். 

''நம்ப விரதத்தாலே என்ன  பலன்  கிடைக்கும்  ஆண்டாள்?'' என்று   ஒரு ஆயார்பாடி  சிறுமி கேட்டதற்கு   ஆண்டாள் 

''நிறைய மழை பெய்யும், பசுவெல்லாம், நிறைய பால் வெள்ளமாகக்  கொடுக்கும். விளைச்சல்  அமோகமாக  இருக்கும். நாடு செழிதத்தால்  நமக்கு சுபிட்சம் தானே. சுபிட்சம் இருந்தால்  திருடு, கொள்ளை,கொலை எதுவுமே இருக்காது. எல்லார் கிட்டேயும்  பணம் நிறைய  இருந்தால்   ஏன்  இன்னொருத்தரிடம் போய்  திருடணும்''

'ஆமாண்டி,   நீ  சொல்றது  வாஸ்தவம் தான்.   நாம்  எல்லாம்  அன்பாக  சந்தோஷமாகவே  இருப்போம். அதுதான் அந்த நாராயணன் விரும்புவதும் அல்லவா.   மழையில்  நனையும்போது  கொஞ்சம்  கஷ்டமாக  இருந்தாலும் நிறைய  மழை இருந்தால்  தான்  விளைச்சல் வரும். நாடு சுபிக்ஷமா  இருக்கும். பல நாள்  சுகத்துக்கு  சிலநாள்  கஷ்டப்படுவது நல்லதுக்கு  தானே.  மழையில்  நனைந்துகொண்டே சென்று  யமுனை ஆற்றிலும்  மூழ்கி  குளிர் நீரில்  நீராடினர் அந்த  ஆயர்குலப்  பெண்கள். நாராயணனை  வேண்டிக்கொண்டே பாடினர்,  வீதி வலம் முடிந்து தத்தம் வீடு சென்று  விரதம் இருந்தனர். மறுநாள்  காலைக்கும்  ஆண்டாளுக்காகவும்  காத்திருந்தனர்.   அவர்கள்  காத்திருப்பது இருக்கட்டும்  நமக்காக   எங்கோ தென்  கோடியில் கோதையும்  விஷ்ணுசித்தரும் அல்லவே  காத்ஹிருக்கிரர்கள்  விரைவோம்  வில்லிப்புத்தூருக்கு.

++

குறைந்தது  ஒரு  பத்து தடவையாவது  விஷ்ணு சித்தர்  அந்த  பாசுரத்தைப்   பாடி  அதன் உள்ளர்த்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

 ''நாராயணா,  இந்த  புவனம்  நீ  படைத்தது.  விஷ்ணுவின்  படைப்பு.  அதில்  நீ  படைத்த  எதுவுமே  எவருமே  நீ.  வைஷ்ணவர்கள் யார்? உன்  அம்சம்.   இந்த  உலகம்  நமக்கு  சந்தோஷத்தைத்   தருவதற்கு என்பது தவிர  அதில் எதுவும்  நமதல்ல.  பூங்காவில் உள்ள  புஷ்பங்கள்  நமக்கு தூரத்திலிருந்து  பார்த்து  சந்தோஷம் தருவதற்கே  தவிர  பறித்து  நமக்கென்று  வைத்துக்கொல்வதற்கில்லை.  ''பூக்களைத்  தொடாதே, பறிக்காதே''  பலகை  அதற்குத்தானே  தொங்குகிறது.   சகல ஐஸ்வர்யங்களும்  வேண்டவே வேண்டாம்.  அவை  உனது.  எங்களுக்கு  வேண்டியது  நீயும் உனது பாத கமல தரிசனமும்  தான்.  'ஆண்டாள்  அந்த  அறியா சிறுமிகள்  வாயிலாக  மூவுலகும்  அளந்தஅந்த  திரிவிக்ரமன் மகத்தை  உணர்த்தி  எல்லாம்  அவனே, அவனதே  என்பதை  உணர்த்திவிட்டாள் .''உத்தமன் பேர்  பாடி  என்று  எவ்வளவு  பொருத்தமாக  அந்த  திவ்ய  அஷ்டாக்ஷர  மந்த்ரோபதேசம் செய்கிறாள்.'' அவன் பேர்  சொன்னாலே  போதுமே.  ''ஆபத் பாந்தவா, கோவிந்தா''  என்ற  திரௌபதிக்கு அந்த  கிருஷ்ணன்  எப்படி  உடனே  வந்து உதவினான்''  

பொழுது புலர்ந்து  விட்டது.  திடீரென்று ஆரம்பித்த  மழையும்  சற்று  நின்றது.   எண்ணத்தொடர் சற்று   நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய  மலர்களின் மேல் செல்ல பெரியாழ்வார்  ''நாராயணா என்னே  உன்  கருணை''  என்று  பூக்குடலை யுடன்  நந்தவனத்தில்  நுழைந்தார்

No comments:

Post a Comment