Friday, November 14, 2014

திருவாலம்பொழில் -

திருவாலம்பொழில் - காஞ்சி மஹாபெரியவர் தரிசனமும் தந்து அருள்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி, நகரப்பேரூந்து அல்லது ஆட்டோவில் ஏறி, தஞ்சாவூர்--கண்டியூர் மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. பயணம் செய்தால், திருப்பூந்துருத்தியை அடுத்து வரும் ஊர், திருவாலம்பொழில். 1950 ம் வருடங்களில், திருவாலம்பொழில் அக்ரஹாரத்தில் 7 அல்லது 8 பிராம்மண வீடுகள் மட்டுமே இருந்தன. இந்த அக்ரஹாரத்திற்குள் நுழையும்போதே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ராகமாலிகையாகப் பாடும் கணீரென்ற குரல் நம்மையெல்லாம் பரவசப்படுத்தி ஊருக்குள் அழைக்கும்.

அந்தக் குரல் வந்த திசை நோக்கிச் சென்றால்,அக்ரஹாரத்தில் இரண்டாவது வீடு, ஸ்ரீவித்யாபரம்பரை, தர்மராஜ அய்யர் வீடு. இந்த வீட்டிலுருந்துதான் லலிதா சஹஸ்ர நாமாவளி வெள்ளிக்கிழமை, மற்றும் பௌர்ணமி தினங்களில் இரவு 9-00 முதல் 10--00 மணிவரை ஒலிக்கும். தற்போதய கால கட்டத்தில் அக்ரஹாரத்தில் உள்ள குடும்பங்கள் பிழைப்பு காரணமாக வெளியூர்களில் குடி பெயர்ந்துவிட்ட நிலையில், தர்மராஜ அய்யர் குடும்பத்தினரும் மற்றும் அவர் செய்துவந்த விக்ரஹ பூஜையும் சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டது. தற்போது அக்ரஹாரத்தில் ஒரேஒரு பிராம்மண வீடு மட்டுமே ( பிழைப்பு-- விவசாயம் ) எஞ்சியுள்ளது. திருவாலம்பொழிலைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை கொரட்டூரில் வசித்துவருபவருமான, ஸ்ரீவித்யா உபாசகர் தர்மராஜஅய்யர் வம்சம், அவரது மகள் ஸ்ரீமதி ருக்மணி, கூறுகிறார்--- "இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாபெரியவர் ஜெகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் 1950ம் ஆணடு என ஞாபகம். தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு, திருவாலம்பொழில் வழியாகப் போகும்போது, எங்கள் கிராம அக்ரஹாரத்தில் இருதினங்கள் பூஜையுடன் தங்கி, திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்திரமௌளீஸ்வரர் பூஜை செய்துள்ளார். வந்த அனைத்து பக்தர்களுக்கு தரிசனமும் தந்து அருள் புரிந்துள்ளார். “எங்கள் வீட்டுக்கு மேற்குப்புற வீட்டில் மஹாபெரியவர் தங்கி பூஜை செய்யும்பொது ஒரு நாள் அதிகாலை 4-30--5-00மணி வாக்கில் தீப்பந்த ஒளி ஏந்தி, தனது சிஷ்யர்கள் புடை சூழ, பக்கத்திலுள்ள எங்கள் கிரஹத்திற்கும் திடீர் விஜயம் செய்துள்ளார்.. நேரே வீட்டிலுள்ள பூஜை அறைக்குச் சென்று, எங்கள் தகப்பனார், ஸ்ரீவித்யா உபாசகர், பூஜை செய்துவந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி விக்ரஹம், ஸ்ரீ ஸோமாஸ்கந்தர் விக்ரஹம், ஸ்ரீ மீனாக்ஷி விக்ரஹம், மற்றும் ஸ்ரீசக்ரம், பஞ்சாயதன பூஜை விக்ரஹங்கள் ஆகியவைகளைதரிசனம் செய்துகொண்டு அவைகளின்விவரங்களை விசாரித்திருக்கிறார்.

அவர் செய்துவந்த ஸ்ரீவித்யா பூஜை முறைகளைப் பற்றியும் விசாரித்திருக்கிறார் ." " மேற்படி விக்ரஹங்கள் திருவையாரில் வசித்து வந்த ஒருவரிடம் இருந்ததாகவும், அவர் செய்துவந்த விக்ரஹ பூஜைகள் ஏதோ காரணங்களுக்காக தடைபட்டு விட்டதாகவும் விக்ரஹங்ளை மூட்டைகட்டி வீட்டுப் பரணையில் வைத்துவிட்டதாகவும், அவரது கனவில் திருவாலம்பொழிலில் அப்போது வசித்துவந்த ஸ்ரீ விஸ்வநாத அய்யரிடம் ( தர்மராஜ அய்யரின் தகப்பனார் ) விக்ரஹங்களை ஒப்படைத்துவிடுமாறும் ஸ்ரீஅம்பாள் தோன்றி, உத்திரவு கொடுத்திருக்கிறாள். அதேபோன்று திருவாலம்பொழில், ஸ்ரீ விஸ்வநாத அய்யர் கனவிலும் அம்பாள் தோன்றி, தான் பூஜை. புனஷ்காரங்கள் இன்றி, திருவையாறில் இன்னார் வீட்டில் இருப்பதாகவும், உடனே அந்த நபர்வீட்டிற்குச் சென்று விக்ரஹங்களை பெற்றுவந்து, தினசரி பூஜை செய்து தன்னை பராமரிக்க வேண்டுமென்றும் உத்திரவு ஆகியுள்ளது.. 

ஸ்ரீ விஸ்வநாத அய்யர் விடிந்தவுடன், திருவையாறு சென்று, அம்பாள் கனவில் குறிப்பிட்ட நபர் வீடு தேடிச்சென்று, அவரிடம் விவரங்களைக் கூற, அந்த நபரும், தன் கனவிலும் அம்பாள் தோன்றி இவ்வாறே கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். விக்ரஹங்கள் தங்கள் வம்சத்தில் பரம்பரையாக இருந்து வருவதாகவும், தற்போது முறையாக பூஜை செய்ய வசதி இல்லாததால், மூட்டைகட்டி மேலே பரணில் வைத்து விட்டதாகவும் அந்த நபர் கூறி, அம்பாள் உத்திரவு கொடுத்தபடி விக்ரஹங்கள் அனைத்தையும் ஸ்ரீ விஸ்வநாத அய்யர் வசம் ஒப்பதைத்துவிட்டார். விக்ரஹங்கள் தங்கள் பரம்பரையில் சுமார் 300 வருடங்களாக இருந்து வருகிறது. இவ்வாறாக தங்கள் வம்சத்திற்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மற்றும் இதர விக்ரஹங்கள் வந்த கதையை ஸ்ரீ பெரியவாளிடம், தர்மராஜ அய்யர் கூறி, தான் செய்யும் பூஜை முறைகளைப் பற்றியும் அவரிடம் தெரிவித்து மஹாபெரியவாளின் ஆசிகளை பெற்றுள்ளார்.”

மேலும் ஸ்ரீமதி ருக்மணி அவர்கள் இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூறுகிறார்.

" மஹாபெரியவர் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்து, பூஜை அறையைவிட்டு, வெளியே வரும்போது, வீட்டுக் கூடத்தில், ஒருவர் மட்டும் தரிசனம் செய்ய வராமல் படுக்கையாக இருந்ததைப் பார்த்துவிட்டு, இது யார் ? ஏன் எழுந்திருக்கவில்லை? என பெரியவர், என் தந்தையாரிடம் கேட்க, தனது தமயனாரின், மாட்டுப்பெண் கடந்த சில தினங்களாக உடம்பு சரியில்லாமல் இருந்து, தற்போது, பக்கவாத நோயினால், எழுந்திருக்கமுடியாமல் உள்ளதாகவும், அதனால் பெரியவா தரிசனத்திகு வரமுடியாமல், மனம் வேதனைப்படுவதாகவும் கூறினார். மஹாபெரியவா நின்ற இடத்திலேர்ந்து, அந்த அம்மாள் படுத்திருந்த திசை நோக்கி, தன் கை கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தினால், தெளித்துவிட்டு, தான் தங்கியிருந்த இடம் நோக்கி, திரும்பச் சென்றுவிட்டார். 

என்ன ஆச்சரியம் ! கை, கால், இயங்காமல் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த எங்கள் மன்னி,(பெரியப்பாவின் மாட்டுப் பெண் ) பெரியவர் எங்கள் கிரஹத்திற்கு வந்து சென்ற இருதினங்களிலேயே உடம்பு ஸ்வஸ்தமாகி, எழுந்து நடமாடஆரம்பித்துவிட்டார்." என்று கூறி முடிக்கும்போது அவள் கண்களில் நீர் முட்டியது.

No comments:

Post a Comment