Saturday, November 8, 2014

கலியுக வரதன் கண்கண்ட தெய்வம்

கலியுக  வரதன்   கண்கண்ட  தெய்வம்  என்று  போற்றப்படும்  திருப்பதி  திருமலைமேல்  அருள் பாலிக்கும்  வேங்கடவன் ஸ்ரீனிவாசன்  உலகப்ப்ரசித்தி பெற்றவன். இன்றோ நேற்றோ அல்ல பல்லாயிரம் வருஷங்களாகவே.  அவனைப்பாடாத  ஸ்தோத்ரம்  இல்லை.  புகழாத  பாசுரம் இல்லை,  வர்ணிக்காத  கவி இன்னும்  பிறக்கவில்லை.  ஆழ்வார்கள்  தமிழ் அழகு, ஓசை, இனிமை, தெளிவு  தேனின்  இனிமை  கொண்டவை.  சில  பாடல்களை  இன்று  படித்துக்கொண்டிருந்தேன்.  உடனே  எழுத உட்கார்ந்துவிட்டேன்.  எதற்கு?  உங்களோடு  சேர்ந்து அனுபவித்தால்  பூரண  திருப்தி.
நீ   எந்த உருவத்தில் தரிசிக்க  விழைகிறாயோ  அந்த  ரூபத்தில்,  எந்த பேரில் அழைக்க விரும்புகிறாயோ  அந்த பேருடன்,  அவ்வாறே  உன் எண்ண ப்ரகாரம் தோன்றி  அருள்பவன்  திருமால் என்கிறார்  பொய்கை ஆழ்வார். ,
தமருகந்த தெவ்வுருவம், அவ்வுருவம்  தானே,
தமருகந்த தெப்பேர் ,  மற்றப்பேர் --  தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமயாதிருப்பரேல்
அவ்வண்ணம் ஆழியான்  ஆம்.
இந்த  திருமாலை  விட  அவன்  வாசம்  செய்யும்  திருப்பதிகள்  உன்னதமானவை. அங்கு சென்றாலே   அவன்  அருள்  கிட்டும்.  எதற்கு?  உலகச் செல்வம்  வேண்டுவோர்க்கு  அதுவும், ஆத்மா சந்தோஷம்  நாடுவோர்க்கு  அதுவாகவும், இந்த ரெண்டுமே  வேண்டாம்  உன்னோடு இருந்தாலே  போதும்  என்போர்க்கு  அவர்கள்  மனம்  நிறைந்தும்  காண்பவன்  வெங்கடாசலபதி.  செய்த  கரும  வினைகள்  அந்த  மலைக்காற்று  பட்டாலே  போய் விடும்.  கால் கடுக்க பல மணி நேரம்  நின்ற  வலி  அரை  நிமிஷ  நேரம்  ''ஜருகண்டி'' யில்  நம்  துயர் நீக்கும்  அல்லவா?   
அதில்  பலர்  விரும்பும்  வண்ணம்   இருப்பவன்  வெங்கடாசலபதி.   அவனுறையும்   ஏழு மலையே  அவன்  முகத்தை  பிரதிபலிக்கிறது  என்று உங்களுக்குத்  தெரியாவிடில்  இதோ  பாருங்கள்.  உற்றுப்பார்த்தால்  திருமலைப்பாதை   சுவர்கள்   தெரிகிறதா?   இப்போது  ஸ்ரீனிவாசன்  படுத்துக்கொண்டு  வானைப்பார்த்துக்கொண்டிருப்பதை பாருங்கள்.  நெற்றி,  மூக்கு, உதடுகள்,  தாடை  எல்லாம்  தெரியுமே.    அதையே  நிற்க  வைத்த வாக்கில்  காட்டினால்  இன்னும்  நன்றாக  தெரியுமே. நெற்றி, நாமம், கண்கள் மூக்கு, உதடுகள் தாடை..  பெயரும்  எழுதி இருக்கிறதே.
  
அவனைப்பற்றி  நான்  இன்று  படித்து ரசித்த  மற்றொரு  பாடல்:
வேங்கடமே விண்ணோர்  தொழுவதுவும் மெய்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் --  வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழிப்  படை தொட்டு 
வானவரைக்  காப்பான்  மலை 
நாம்  மட்டும்  அல்ல,  முப்பத்து  முக்கோடி தேவர்களும்  தொழும்  மலை,  சகல  நோய் நிவாரணி  திருமலை. எளியோர்க்கும் தேவர்க்கும்   கொடுமை சேயும்  அரக்கர்களைத்  தனது  சக்ராயுதத்தால்  அழிக்கும்  திருமால் உறையும்  மலை  திருமலை.  திருமழிசை ஆழ்வாரின்  வர்ணனை  இது. 
நம்மாழ்வார்  எபோதுமே  ஒரு  படி மேலாகவே  இருப்பவர்.  அவரது  தமிழுக்கு  ஈடே  கிடையாது.  ஹே   வெங்கடேசா, நீ  தான்  எல்லாமே ,  இந்த  மூவுலகுமே, மார்பில்  திருவை  உடையவா, தன்னிகர்  இல்லானே.  என்னை  ஆள்பவனே. திருவேங்கடத்தானே,  உன்னை விட்டால்  வேறு  ஒருவர்  எனக்கில்லை. உன்னடியில்  சரண் புகுந்தாகி விட்டது  என்கிறார்.
அகலகில்லேன், இறையும் என்று, அலர்மேல்  மங்கை உறை  மார்பா,
நிகரில் புகழாய்  உலகம்  மூன்றுடையாய்,  என்னை  ஆள்வானே,
நிகரில்  அமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே,
புகலொன்றில்லா, அடியேன்  உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
இதை ரசித்து  மனத்தில்  ஏற்றிப் 
புகழ்பவனுக்கு மோக்ஷம் கிட்டாமலா போகும்?  
இன்னும்  ஒரு  பாசுரத்தொடு  முடிக்கிறேன்.
இந்த  உடம்பு  நாள்  செல்லச் செல்ல   மேலும் மேலும்  சதையும்  நிணமும், ரத்தமும் கலந்து  பருத்துப்போகும்.  எனக்கு   இந்த உடல்  மீது  கொஞ்சமும்  பற்று  இல்லை. 
ஹே   கிருஷ்ணா,  நப்பின்னைக்காக  ஏழு  எருதுகளை  அடக்கியவா,  உனக்கு  அடிமையாக  என்னை  எடுத்துக்கொள்வாயா ? உன்  கை  பட்டுப்  பட்டுத்தானே  அந்த  பாஞ்ச  ஜன்யம்  என்கிற  சங்கு  கூட  வளைந்து  அழகாய் இருக்கிறது.  என்னையும்  அப்படி அணைத்துக்கொள். அட  சரி,  ஒன்றுமே  இல்லை என்றாலும்  இந்த திருமலை யில்  இருக்கும்  அழகிய  புஷ்கரணியில்  ஒரு  பரவையாகப்பி றக்க வேண்டும்.   மனிதப்பிறவி  வேண்டவே  வேண்டாம். இப்படி  வேண்டியவர்  பிரசித்தி பெற்ற  ஒரு  ராஜா. குலசேகர ஆழ்வாராக மாறியவர்.
அவருக்கே  பிறகு  தாம் கேட்டதில்  சந்தேகம்  வந்தது.  ஒருவேளை  பறவை பறந்து விட்டால்.? அப்படி எனில்  அந்த  புஷகர்நியில்  மீனாகவே  பிறக்கிரேனே?  ச்சே  ச்சே  தண்ணீர்  வற்றிவிட்டால்  மீன்  எப்படி  வாழும்? திருமலை வாசனின்  எச்சில்  பாத்திரமாகவாவது என்னை  பண்ணிவிடுகிறாயா?.வேண்டாம்  பொன்  வட்டில்,  அது  காணாமல்,  திருடுபோனால் அப்பறம்  நான்  எப்படி  உன்னோடு  இருப்பது?  எனவே  இந்த  மலையில்  ஒரு  சண்பக மரமாக  நிற்கட்டுமா? என்  பூவையெல்லாம்  நீ  சூட்டிக்கொள்ளேன்.  அதுவும்  தவறோ?  என் னிடம்  உள்ள  பூவெல்லாம்  பிறர்  பறித்துப்  போய்விட்டால்  நான்  நின்று  என்ன பயன்? பேசாமல்  ஒரு  புதராக இங்கு  இருப்பேன்.  ஒரு  தொல்லையுமில்லை. ஐயோ,  இந்த மலையைச்சீர் செய்கிறேன்   பேர்வழி  என்று   என்னை செதுக்கி  எடுத்து  களைவார்கள்.  அப்பறம்  நான்  எப்படி  உன்னோடு?  இது  தான்  சரி.  இந்த  மலைக்கூட்டத்தில் ஒரு  சிகரமாகவே  மாற்று  என்னை. ஒரு  யோசனை.  யார்  உயரமாக ஏறி  என்னை  அணுகுவர்?  உன்  தொண்டர்களுக்கு  என்னால் என்ன  பயன்? அதோ  தெரிகிறதே  அந்த  மலைச்சிகரங்களில்  வழிந்து  இறங்கும்  காட்டாறு.  அதாக மாறி விட்டேன் என்றால்  உன்  அடியார்களின்  காலைத்தீண்டும்  பாக்யமாவது கிடைக்குமே?  அடேடே  உன்  மலைக்கு  வர  வேறு  வழிகள்  வைத்திருகிறார்களே.  எவன்  காட்டாறு  வழியாக  வருவான் உன்னை  பார்க்க.  இது  வீண்  எண்ணம். ஒரு  உபாயம்  உன்னருளால்  எனக்கு இப்போது  கிடைத்து விட்டது.  பேசாமல்  துளியும்  அசைக்க முடியாத  பெரிய  பாராங்கல்  படியாக  உன்  ஆலயத்தின்  வாசலின்  கிடக்கிறேன்.  என்னை  மிதித்துக்கொண்டுதான்  அனைவரும்  உன்னை  தரிசிக்க  வருவார்கள்.  நானும்  உன்னை  இங்கிருந்தே  நகராமல்   பார்த்து மகிழலாம்  என்கிறார்.   அதனால்  தான்  பெருமாள்  ஆலயங்களில் கர்பக்ராஹத்துக்கு  முன்னால்  உள்  வாசல்படிக்கு  குலசேகரன் படி  என்று  பெயர்.  அதன்  மீது  கால்  வைக்காமல்  வணங்கி  தாண்டி  வருகிறார்கள்.
பார்க்க வேண்டிய பொக்கிழம்.

No comments:

Post a Comment