Sunday, November 23, 2014

ஒரு சந்தோச கதை


வாங்கோ  கமலாம்மா?

சார்,  நேத்திக்கு  நீங்க  ஒரு  கதை மாதிரி பவர்புல்லா  ஒரு  விஷயம் சொன்னீங்கன்னு  உங்க  பேரன் க்ளாஸ்லே  சொல்லிக்கிட்டிருந்தான்.  நான்  உங்கள்  நேரிலே கண்டு அதை  விவரமா  கேட்க  வந்தேன்.  

ஒ  அதுவா   -- நான்  படிச்ச  ஒரு  குட்டி  கதை.   சொல்றேன்   சொல்றேன்  கேளுங்க: 
பிளாஸ்கிலிருந்து  கொஞ்சம்  வெந்நீர்  குடித்து விட்டு  தொண்டனைக்  கனைத்துக்கொண்டு  தாத்தா  சொன்ன  கதை.


'' ஒரு பணக்காரி  மனநோய்  நிபுணர் கிட்டே  போனாள்.

உங்களுக்கு  என்னம்மா  குறை?

''வாழ்க்கையே  எம்ட்டியாயிடுச்சு  சார். எல்லாம்  இருந்தும்  என்ன  சார்  பிரயோஜனம். வெறுத்து விட்டது.  அர்த்தமில்லாததா  போச்சு.  ஏன் சார்  எனக்கு  அப்படி?”

 நிபுணர்  சற்று தூரத்தில்  தரையை  பெருக்கி  துடைத்துகொண்டிருந்த  வேலைக்காரி  பட்டுவை  கூப்பிட்டார். 
அம்மா  உங்க  எதிர்லே  இந்த  சாதாரண  வேலைக்கார அம்மாவை  அவ  வாழ்க்கையைப்பற்றி கேக்கறேன். என்ன சொல்றான்னு கேளுங்க.''

பட்டு  வந்ததும்  அவளை  டாக்டர்  ''அம்மா   உங்க  குடும்ப  வாழ்க்கை  பற்றி  சொல்லுங்க ''.
கிழவி  பட்டு  துடைப்பத்தை  தரையில் வீசிவிட்டு,  மூலையில்  தரையில் உட்கார்ந்தாள்.

என் புருசன்  போன வருஷம்  மார் நோவுலே பூட்டார்.  மூணு  மாசம் கூட  ஆவலை . என் ஒரே  புள்ள  சைக்கிள்ளே  போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு  படுபாவி  லாரி  ஓட்டிட்டு வந்து  அவனை  கொன்னுட்டான்.  நான்  நடுத்தெருக்கு  வந்துட்டேன்.  யாரு இருக்கா எனக்கு  கஞ்சி  ஊத்த.   ஒத்தரில்லை. நான்  என்ன படிச்சிருக்கேனா. பணம்  வச்சிருக்கேனா.   உடம்பும்  முடியல.  உயிர்  வாழணுமே.  என்கிட்டே இன்னா  இருக்குது  ஒண்ணுமே  இல்லை. தூக்கமே போச்சு.  சாப்பிட பிடிக்கல.  சிரிப்பே  போய்டுச்சி.  தூக்கு  போட்டுக்கிட்டு  தொங்கிடலாமா ன்னு கூட  யோசனை  போச்சு.  நாலு வீடு  பெருக்கி  சாமான் துலக்கி  வயத்தை  கழுவினேன்.

அப்போதான்  ஒரு  நாள், நான் வேலையெல்லாம்  முடிச்சு  என் குடிசைக்கு  திரும்பும்போது என் பின்னாலேயே  ஒரு  பூனை, அது பின்னாலே ஒரு  குட்டி. ரெண்டும்  கூடவே  ஓடியாந்திச்சு. அதுங்க  ரெண்டும்  என் கூடவே  குடிசைக்குள்ளார   வந்துடிச்சி. அதுங்களை  பாத்தாலே  பாவமா  இருந்தது எனக்கு.  வெளிலே  நல்ல குளுரு.  அதுங்களுக்கு  கொஞ்சம்  பால் இருந்தது  தண்ணியை ஊத்தி  ரெண்டுக்கும்  தட்டிலே வைச்சு  குடுத்தேன்.  நக்கி நக்கி குடிச்சுதுங்க. என் கால் மேலே  ஏறி  ஏறி  அந்த  குட்டி  விளையாடிச்சு.  முத முதலா  அப்ப தான்  நான் எத்தனையோ மாசத்துக்கு  அப்பறம்  வாய்  விட்டு  சிரிச்சேன். என்னமோ  திடீர்னு   அப்போ தோணிச்சிங்க.  ஒரு  பூனைக்கு  உதவினாலே  இத்தனை  சந்தோஷம் வருமின்னா என்னை மாதிரி   ஜனங்களுக்கு  உதவி  செஞ்சா  எத்தனை  சந்தோசமா இருக்கும்.   மறுனா காத்தாலே வூட்டிலே  கொஞ்சம்  ரொட்டி  செஞ்சு  மூணாம் குடிசைலே  இருக்கிற உடம்பு சரியில்லாத ஒரு  தாத்தாவுக்கு  கொடுத்தேன். அவரு கண்ணிலே  தண்ணி.  கையெடுத்து  கும்பிட்டாரு.  எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சி. அன்னிலேர்ந்து  தினோம்  யாருக்காவது  எதனாச்சியும்  உதவரதுன்னு முடிஞ்சதை  செஞ்சுட்டு வரேன்.  ரொம்ப  மனசுக்கு  சந்தோசமா இருக்குங்க. அவங்க  சந்தோசமா  சொல்ற வார்த்தை,  பாக்கிற  பார்வை நம்மளை  எங்கேயோ  கொண்டு போய்டுதுங்க. சொன்னா  நம்பமாட்டீங்க.  என்னமாதிரி  நல்லா  தூங்கறவ, சந்தோசமா  இருக்கிறத வச்சு  முடிஞ்சத  கொடுத்து  மீதிய  சாப்பிடறதிலே  வர  சந்தோஷம்  கிடச்சவ யாரும்  கிடைக்க மாட்டாங்க. அவ்வளோ  சந்தோசமா  இருக்கேன்  நானு. ''

'பணக்காரி வாயைப்  பிளந்து  கிழவி  பட்டு  சொன்னதை  கேட்டுக்கொண்டு  சிலையாக  அமர்ந்தாள். கிழவி சொல்லி  முடித்தவுடன்  ஒ  வென்று  கதறினாள். 

நிறைய  பணம்  இருந்து என்ன பிரயோஜனம்.  அந்த  பணத்தால்   வாங்க  முடியாத  நிறைய  சமாச்சாரங்களும்  இருக்கின்றனவே  புரிகிறதா?  அவற்றை தான்  அவள்  இழந்திருந்தாளே . அன்றிலிருந்து அவற்றை  தேட  ஆரம்பித்துவிட்டாள் .  பட்டு  தான்  அவளுக்கு  குரு ஆகிவிட்டாளே .  

No comments:

Post a Comment