Tuesday, October 7, 2014

தோல்வியை ஏற்கும் மனப்பக்குவமும் அவசியம்


.
'இன்னிக்கு  ஸ்கூல்  லீவ் வேஸ்ட் தாத்தா''
.
''ஏண்டா  கோபு.''

''சரஸ்வதி பூஜா  லீவும்  காந்தி  ஜெயந்தியும்  ஒண்ணா  வந்துட்டுதே.  ஒரு  லீவ்  வேஸ்ட்  இல்லையா?''

''ஏன்  ரெண்டு லீவ் ஒரே நாள்லே  வந்ததாலே, ஒரு நாள் எக்ஸ்ட்ரா   படிக்க  பள்ளிக்கூடம்  இருக்கேன்னு  சந்தோஷப்படு.  ஒவ்வொரு  நாளும்  பள்ளிக்கூடம்  போறதாலே  எத்தனை விஷயம்  புதுசா  தெரிஞ்சிக்கிறே.  அதுக்கு  சந்தோஷப்படவேண்டாமா?   அதுசரி  சரஸ்வதி பூஜை பத்தி  சொன்னேன்.   காந்தி ஜெயந்தி பத்தி  உனக்கு என்ன தெரியும்?''

''தாத்தா  அந்த  காந்தி உன்னைமாதிரி ஒரு தாத்தா.  நீ  வீட்டுக்கு  தாத்தா  அவர்  நாட்டுக்கு  தாத்தா. அவ்வளவு தான்''

''அவர்   ஒரு யுக  புருஷர். அவரைப்பற்றி நிறைய  தெரிஞ்சுக்கணும் நீ. ''

சொல்லுங்க  தாத்தா''

'' சில  பொன்மொழிகள்  அவரைப்பத்தி  சொல்றேன்  நோட்டில்  எழுதி வைத்துக்கொள்.''  கோபு  தன்னுடைய  ஒரு  நோட்டில்  தாத்தா  என்ன சொன்னார்  என்பதை எழுதி வைத்துக்கொண்டான்  அல்லவா.  அவை  என்ன  என்று  பார்க்கலாமா ?''

காந்தி  சொன்ன சில  பொன் மொழிகள்: 

''நீ  ஒரு  சிறந்த   காரியத்தில்  உன்னை ஈடுபடுத்த  விரும்பினால்  மற்றவர்க்கு  உழைப்பதில், உதவுவதில் உன்னை  கரைத்துக்  கொள்வதால்  தான் முடியும் '' 

''கடவுள்  எவ்வளவோ  தூரம் நம்மை  நெருங்கி  வந்து அருள முயன்றாலும்,   என்னவோ  நாம்  அவரை விட்டு  விலகியே செல்கிறோம்.  இழப்பு  நமக்கே''

''ஒவ்வொரு  சமயமும்  நான்  சூர்ய அஸ்தமன அழகையும்  அதிசயத்தையும்  கண்டு  வியந்துபோகிறேனே.  பூரண  சந்திரனின்  ஒளியிலும்  காந்த  சக்தியிலும்  குளுமையிலும்  என்னை  அடியோடு இழந்து போகிறேன்.  அப்போது  என்  ஆன்மா  இறைவனின்  அதீத  சக்தியை  நினைத்து  வணங்கி  விரிவடைகிறது ''

''சந்தோஷம்  எப்போது  தெரியுமோ?   நீ  என்ன  நினைக்கிறாயோ, என்ன  சொல்கிறாயோ,   என்ன  செய்கிறாயோ  அதெல்லாம்  மற்றவருக்கும்  விருப்பமளித்து உதவும்போது  தான். ''

''உண்மையிலேயே   உலகில் அமைதி நிலவ  வேண்டுமானால், யுத்தத்தோடு  யுத்தம் செய்து  அதை  நிறுத்தவேண்டும்.  குழந்தைகளோடு நிறைய நேரம்  செலவழித்து  அவர்களை  இளமையிலேயே  அமைதிப்பாதையில்  தவறாமல்  கூட்டிச் செல்ல வேண்டும்.    .அவர்கள்  தானே  நாளைய வீரர்கள்.  அமைதியில் பழகியதால்  அமைதியையே  பரப்புவார்களே''.   
(அதில்லாதவர்களால்  தானே  எல்லாவித  அழிவையும்  நாம்  அனுபவிக்கிறோம்). 
 
''எவரிடமும்  இருக்கும்   நல்ல குணம், செய்கை,  எண்ணம்,  இவை மட்டுமே எடுத்துக்கொள்,. யாரிடம்  தான்  குறையில்லை? நம்மிடம் இவ்வளவு  குறை இருக்கும்போது  எவ்வாறு  மற்றவரின்  குறைகளை  விமர்சிக்க  நாம்  அருகதை  பெற முடியும்.?''

''ஊன்றி கவனித்தால்  உலகில்  நமக்கு எது  அத்தியாவசியமோ  அதை எல்லாம்   கடவுள்  நமது தேவைக்கு  ஏற்றவாறு  அளித்திருக்கிறான்.  ஆனால்  நாம்  தேடுவதோ  தேவைக்கு  மீறிய  பேராசையால்  நாம்  விரும்பும் பொருள்களை!''

''எப்படி  மற்றவரை  மிதித்து துன்புறுத்தி அதால்  நமக்கு  மதிப்போ, மரியாதையோ, பெருமையோ, கவுரமோ  பெறமுடியும்.? இது  ஒரு  புதிராகவே தோன்றுகிறது. 

''ஒருவன்  தனக்கு  நண்பனாக இருப்பவனிடம்  நட்போடு  இணைவது சுலபம்.  அதே நேரத்தில்  எவன்  உன்னை  வெறுக்கிறானோ, விரோதத்தோடு  இருக்கிறானோ  அவனோடு  நட்பு  கொண்டாடுவது  நமது  மதத்தில்  ஒரு  உயரிய  பண்பாடு. ஒரு  உயர்ந்த மதத்தில்  காணப்படும்  சீரிய  பண்பு  இது.''

''பிரார்த்தனை  என்றால்  என்ன  தெரியுமா?  வார்த்தைகள்  கலக்காத இறைவனை நாடி ஒன்றுபட்ட  மனமும்  இதயமும் .  இதயம் கலக்காத  வெறும்  வார்த்தைக்  கூட்டம் பிரார்த்தனை ஆகாது.  ''

''மனிதனின்  உடலை சீரழிப்பது  அவன்  கொள்ளும்  கவலை  ஒன்றே.   கடவுள் மீது நம்பிக்கையும்  பக்தியும்  கொண்டவன் மற்ற  எதைப்பற்றியும்  கவலைப்பட்டால்  அது  வெட்கப்பட வேண்டிய  சமாசாரம்.''

''எதாவது  ஒரு  சிறிய செயலானாலும்  அதனால்  ஒரு  இதயத்தை  உன் சேவையால்  சந்தோஷப்படுத்தினால் ஆயிரம்  தலைகள் ப்ரார்த்தனையில்  வணங்குவதை விட  உயர்ந்தது''

''மனிதர்கள்  மேல்   நம்பிக்கை  இழக்காதே.  அது  ஒரு  பெருங்கடல்.  சில  துளிகள் சாக்கடை நீர்  என்பதால்  அந்த  மாபெருங்கடல்  மாசுராது. அழுக்குராது. ''

உலகம்  மாறவேண்டும்  என்று  நீ  விரும்பினால்  உன்னை  முதலில்  மாற்றிக்கொள். பிறகு பார்.  அது  தானாகவே  நீ  விரும்பியபடி  மாறியிருக்குமே. ''

தாத்தா  ரொம்பவே  நன்றாக  சொல்லியிருக்கிறார்  காந்தி. ''

''கோபு   நாம்  இதை மறவாமல்  பின்பற்றுவோம்.  மற்றவர்க்கும்  எடுத்து  சொல்வோம்.  இதுவே  காந்தி  ஜெயந்தியை  கொண்டாடும் சரியான  முறை. காந்தி அருவமாக இதை பார்த்து  மகிழ்வார்''
                                                      
 பிணக்குகள் 

அடே   கோபு   என்னடா  அங்கே  ரொம்ப  சத்தம்?''

பக்கத்து வீட்டு  சாமா  மாமாவுக்கும்  அவர்  பிள்ளை  கிட்டாவுக்கும்  பெரிய  சண்டை.  மாமி  வேறே   ரெண்டு  பேரையும்  மாத்தி மாத்தி வையறா யாரும்  அடங்கலை.  நீங்க  போய்   சமாதனம்  பண்றேளா?''

சமாதானம்  அடையவேண்டியவர்களே  புரிந்து கொண்டால்  தான்  சச்சரவு  அடங்கும்.  நடுவிலே  வருபவர்கள் போகிறவர்களுக்கு  இதில்  எந்த  அதிகாரமோ  உரிமையோ  கிடையாதுடா  கோபு .''

என்ன  தாத்தா  சொல்கிறீர்கள்.  விளக்குங்கள்.

சண்டை  சச்சரவு என்பதே  ரெண்டு  பக்கமும் ஒருவரை ஒருவர்  புரிந்து கொள்ளாததால் தான்  உண்டாகிறது.  தங்கள் கருத்துகளை,  சொல்ல வந்ததை  தெளிவாக   மற்றவரை  உறுத்தாமல்  சொல்ல  தெரியவில்லை  என்று  அர்த்தம்.  

பேசுவதை  முதலில்  அமைதியாக  குரல் உயர்த்தாமல்  சொல்ல  கற்றுக்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால்   நீ  வீணாக்கும்  சக்தியை  எதிர்ப்பவன் அனுகூலமாக   எடுத்துக்கொள்வான்.   மெதுவாக  அமைதியாக  சொல்லும்போது  எதிராளி  நீ  அவனுக்கு  எதிரி இல்லை  என்ற  எண்ணம்  விழும்.  அதுவே  உனக்கு   நீ  உணர்த்தும்  கருத்துகளை   நிதானமாக அழுத்தம் திருத்தமாக  எடுத்து அறிவுறுத்த  சாதகமாகும். அப்படி  உணர்ச்சி வசப்பட்டாலும்   உன்னுடைய  மானம்  மரியாதை  இவற்றை  விட்டுக்கொடுக்காமல்   உனக்கே உரித்தான  சுய  கௌரவத்தோடு  உன் வாதத்தை  முன் வைக்க வேண்டும்.  குரல்  ஒரே  சீராக  உயராமல்  இருப்பது  அவசியம்.  வேகம்  விவேகம்  அல்ல.  கை காலை எல்லாம்  ஆட்டி  அசைத்து  உன்  பேச்சு  தேவையல்ல.  பேசும்  வார்த்தைகளும்  அளவோடு  இருக்கவேண்டும்.     உன்னுடைய    உடல்  அசைவுகளிலிருந்து  மற்றவனுக்கு  நீ   ஆழமான  அழுத்தமான  தீர்மானமான  கருத்துகளோடு  வந்திருக்கிறாய்  என்று  புரிபடும். சண்டைக்கோழி அல்ல  என்று  புரிந்து கொள்வான். 
 
பேசும்போது  யாரையும்  தூக்கி  எறிந்து பேசாதே.  வார்த்தைகளால்  சுடுவது  தவறு. கோபமாக  இருக்கும்போது  யாருமே   நிலை  தடுமாறுவது  வழக்கமாக  நிகழ்வது தான்.  இதை  ஞாபகத்தில்  கொள்ள வேண்டும்.  எதிராளி  சாதாரணமாக சொல்லும்  வார்த்தைகள் கூட  தப்பர்த்தமாக  தோன்றும்.  மறைமுகமாக   தம்மை  இகழ்வது போல்  தோன்றும்.   இது இயற்கை. 
 
ஒருவர்  பேசும்போது குறுக்கிடக்கூடாது.  அவர் சொல்வதை  கவனிக்க வேண்டும்.   எதிர்க்க வேண்டாம்.  சொல்லும்  உரிமை  அவருக்கும் இருக்கிறதே.  அவர் சொல்வதை  ஆமோதிக்கவேண்டும்  என்று அவசியமில்லை.   அவர்  மனதிற்குள்  நீ  புகுந்து அவர் கருத்துகளை  மாற்ற  உனக்கு  அதிகாரம்  இல்லை.  முடியவும்  முடியாது.  எதிர்ப்பு  அனாவசியம்.   எதிரான  கருத்துகளை  அமைதியாக  அறிவிக்கலாம். அவமரியாதைப் படவோ,  படுத்தவோ   எந்த  முகாந்திரமும்  இல்லை. 

 பேச்சில்  நிதானத்தை விட  நியாயம்,  நேர்மை,  தக்க  ஆதாரம்  இருக்க வேண்டும்.   இந்த  பேச்சு  சம்வாதத்தில்  முடிவு  நமக்கு  சாதகமாக  இருக்கவேண்டும்  என்று  எதிர்பார்க்கவேண்டாம்.  முடிவு நாம்  எதிர்பார்ப்பதாக  இல்லாமலும்  இருக்கலாம்.   நாம் நினைத்ததே  சாதிக்கலாம்  என்பது  குதிரைக்கொம்பு.   அதை  எதிர்  நோக்கி  நீண்ட  கால  வாத  பிரதிவாதம்  பிரயோசனமற்றது.  

சில  சமயங்களில்  எதிராளி  கொஞ்சமும்  புரிந்து கொள்ள  சக்தியற்ற,  பிடிவாத,  கீழ்த்தர  உணர்ச்சிகளை மட்டும்  வெளிப்படுத்த கூடியவராக  இருக்க  நேரிட்டால்,  பேச்சை தொடர்வதில்  காரணமில்லை.   பேச்சை  நிறுத்திக்கொள்ள வேண்டும். 

டெலிபோனில் பேசுவதை விட  நேரில்  பேசுவது  பல  சமயங்களில்  பயனுள்ளதாகும்.  கீழ்  சிப்பந்திகளோடு  பிணக்கு  என்றால்  அவர்களுடைய  அதிகாரிகளோடு  பேசுவது   சமயோசிதம்.   

வாதத்திற்கு முன்  உன்னுடைய  தரப்பில் என்ன  குற்றம் குறை  இருக்கிறது  என்று  அலசு.  அவற்றை  சரி செய்துகொண்டு  பிறகு   எதிராளியின் வழக்கை  அலசு.    முழுமையாக  புரிந்து கொள்ளாமல் இரு பக்கங்களும்  மோதுவது  சர்ச்சை  தீர  வழி காட்டாது.   மறைத்து பேசுவது வெற்றி அளிக்காது.  வெற்றி  நமக்கே  என்பது  எதிர்பார்க்க முடியாதது.  தோல்வியை  ஏற்கும்  மனப்பக்குவமும்  அவசியம் 
   
இதெல்லாம்   தான்   நமது  நீதிமன்றங்களில்   பின்பற்றுகிறார்களா  தாத்தா?''

அடே  பேரா,  இதெல்லாம்  நியாயமாக  நடந்தால்  நீதி மன்றம்  எதற்கு  அப்பனே? .   பல யுகங்களாக  வழக்குகள்  ஒவ்வொரு கட்சியும்  தனது  கருத்துகளை  தவறாக  பொய்யாக,  ஜோடித்து, நீதிக்கு புறம்பாக,  சாமர்த்திய  பேச்சுகளால்,  எதிராளியை  தவறாக  எடை  போடுவதால்,  பண பலத்தால்  விலை பேசுவதால்,   வழக்கறிஞர்களின்  பேசும்  திறமையை  நம்பி   என்றெல்லாம்   இழுத்துக்கொண்டு  போகிறது  என்று  அறிகிறோம்.  தவறுகளை  ஏற்றுக்கொள்ள  தைர்யம்,   மனோ  திடம்,  பொறுமை,  பெருமை  இல்லை .  முள்ளாலே  தீரவேண்டியது  கோடாலியால்  வெட்டப்பட்டு  சேதம்  அதிகமாகிறது.  

No comments:

Post a Comment