Wednesday, September 17, 2014

நாலு நாள் சமாசாரம்

நான்கு நாட்கள்  தான்   நீங்கள்  கொடுத்து வைத்தவர்கள்.   நான்   வெளியூர் சென்றதால்  என்  எழுத்திலிருந்து  விடுதலை  உங்களுக்கு.  செய்த  பாவம்  யாரை விட்டது.  மீண்டும்  துளைத்தெடுக்க  வந்துவிட்டேனே.  தப்ப முடியுமா ?? 

ராமேஸ்வரம்  ஒரு தீவு.  ராவணன்   என்கிற பிராமணனைக்   கொன்ற பிரம்மஹத்தி   தோஷம் நீங்க  ராமர்  இலங்கையீருந்து திரும்பி   இங்கு வந்து  ஒரு  சிவலிங்கமும்  கிடைக்காமல் ஹனுமனை விட்டு  கைலாசத்திலிருந்து ஒரு  சிவலிங்கம்  கொண்டுவர  அனுப்பினார்.  அதற்குள்  சீதை   மண்ணால் ஒரு  சிவலிங்கம்  பிடித்து  அதற்கு    ராமர் பூஜை செய்து  பாவம்  தீர்த்துக்கொண்டார்.  ராமர் வழிபட்ட அந்த  ஈஸ்வரன்  தான்  ராமேஸ்வரன், அந்த  ஊர்  தான்  ராமேஸ்வரம்.   

உலகத்திலேயே  பெரிய  அழகிய ப்ரஹாரம்   கொண்ட  அற்புதமான கோவில்  ராமேஸ்வரம்.  வெளியே  கிழக்கு  மேற்காக 690 அடி  நீளம்,  வடக்கு  தெற்காக  435 அடி.  உள்  ப்ரஹாரம்  395 அடி.  இருக்கும்  தூண்கள்  1212.   தரையிலிருந்தே  மேலே கூரை  வரை  23 அடி உயரம்.  ராமநாதபுரம்  ராஜாக்கள்  சேதுபதி  மன்னர்கள்.  அவர்கள்  கைங்கர்யம்  சொல்லி  மாளாது.  ஒரு  பெரிய நந்தி  நாக்கைத்  துருத்திக்கொண்டு  ராமேஸ்வரன்  சந்நிதிக்கு  முன்னே  பிரம்மாண்டமாக  அமர்ந்திருப்பதை  காணத்தவறாதீர்கள்.   

ராமேஸ்வர சமுத்திர ஸ்நானம்   ஒரு  மறக்கமுடியாத இன்ப  அனுபவம்.  ஆழமே கிடையாது.  மனதை  உள்ளே செலுத்தி ராமேஸ்வரனை வேண்டி   முழுக்கு  போட்டவர்களுக்கு தான்   அந்த  சுகம் புரியும்.  படிக்கட்டுகள்  இருக்கிறது.  கீழே  கல் காலை  குத்தவில்லை.  

 அலைகள் பயம்  இல்லாது  கரையிலிருந்து   இருபது முப்பது   அடி தூரம்   முழங்கால்  அளவோ,  குள்ளமானவர்களுக்கு  வயிற்றளவு  வரையிலோ  ஜலம்.  பெண்கள்   சந்தோஷத்தோடு ஸ்நானம்  செய்கிறார்கள். 


 போன இடத்திலும்  யாரையும்  விட்டுவைக்கவில்லை.  இது சில  பேர் ஜாதகம்.   ராமேஸ்வரத்தில் போய்  பாபம் தீர்த்துக்கொள்ள  சென்றேன்.  அங்கு  போனவர்களுக்கு தெரியும்.  22  புண்ய தீர்த்தம் என்று  கிணறுகள்/ஊற்றுக்களிலிருந்து குட்டி குட்டி வாளிகளில்  ஜலம் மொண்டு  தலையில்  ஊற்றுவார்கள்.  வடக்கத்தி  தெற்கத்தி என்று வித்யாசம்  எல்லாம்   இந்த இடத்தில் கிடையாது.  வரிசையாக  வந்து  நெருக்கி  நின்று  அபிஷேகம்  பெற்றுக்கொள்வார்கள். 

 சில  ஊற்றுக்களில்  கொஞ்சமாக  ஜலம்  இருந்தால்  கால் வாளி   நீருக்கு  ஐந்து  ஆறு தலைகள்  நீளும்.   சில  தம்ளர்கள் ஜலம்  தான்   தலையில்  கிடைக்கும்.  என் மனைவி  ரெண்டு  கிணற்று ஜலம் வாங்கிக்கொண்டு  நகர்ந்த இடத்தை  ஒரு குஜராத்தி  பெண் பிடித்துக்கொண்டு  என் நிழலாய் ஒட்டி  தலையில் ஒன்றாய் நீர் பெற்றுக்கொண்டோம்.   அவளுக்கு  முதலில்  இடம்  விட்டால்  கூட  அவள்  நகரவில்லை.  என் தலையில் விழும்  புனித நீரிலும்  பங்கு  எதிர்பார்த்தாள். 

  இவ்வாறு  நாலைந்து கிணறுகளில்  புண்ய  ஜலம்  நாங்கள்   எனது விருப்பமின்றி  அவள்  புண்யம்  தேடுகையில்  எனது  எதிர்கால   குடும்ப  நிம்மதியைக்  கருதி  அந்த  பெண் மணியை தொலைக்க  பாடு பட்டுக்கொண்டிருக்கும்  சமயம்  தான்  ராமனாதேஸ்வரர்  ஒரு
தெலுங்கு  காரர்  குடும்ப  உருவில்  ஆபத் பாந்தவனாக வந்து  என்னை  காப்பாற்றினார்.  அந்த  தெலுங்கு குடும்பம்  அவளை ஒரு  கோழிக்குஞ்சை  வளைத்துக்கொண்ட  கழுகுகளாக  சூழ்ந்துகொண்டதில்  நான்   மீண்டேன்.   குடும்ப  எதிர்ப்பு  ஆபத்திலிருந்தும்  விடுபட்டேன்.  

சாவதானமாக அந்த  கூட் டத்தை  நகர்ந்துகொள்ள விட்டேன்.  நான்  அந்த  கிணற்றுக்கு என்ன  பெயர் என்று  மேலே  பார்த்தபோது  என்ன ஆச்சர்யம்.   நான்  விடுபட்ட  இடம்   ''பிரம்மஹத்தி  சாப  விமோசன தீர்த்தம்''.   என்னை விட்டு  தெலுங்குக் காரரை  அது  பிடித்துகொண்டதோ  என்னவோ  அது  அவர்  வந்த வழி.

ராமேஸ்வரம்  ரொம்ப   மாறிவிட்டிருந்தது.  நான்  கடைசியாக  சில  வருஷங்களுக்கு  முன்  பார்த்தபோது.  நடக்க  தெருவில் இடம்  இருந்தது.  சில  தென்னிந்திய  குடும்பங்கள்  சுட  சுட  இட்லி,  பொங்கல்,வடை  தந்தார்கள்.  இப்போது காணோம்.    பரோட்டா கடைகள்  பரவி இருப்பதை  த்தான்  பார்க்க  முடிகிறது.  பேருந்துகளை  நடக்க முடியா  தூரத்தில்  நிற்க வைத்து விடுவதால்  வெருங்கா லோடு நடப்பது   ரொம்பவே  கடினமாக இருக்கிறது.  வண்டலூர்  மிருக காட்சி சாலைக்குப்   பிறகு ராமேஸ்வரத்தில்  தான் பேட்டரி   கார் பார்த்தேன்.   சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் தான்  ஒருமுறை  கூட அதில்  ஏற சந்தர்ப்பம்  கிடைப்பதில்லையே.  

அப்துல் கலாம்  வீடு  பார்க்க  நான்  சென்ற இடத்தில்   சங்கு வியாபார  விளம்பரம்   கண்ணை உறுத்தியது.  கலாம்  வீடு  என்ற ஒரு  வீடு  சார்த்தியிருந்தது.  குடும்பத்தார் காலத்திற்கேற்ப  வீட்டை   மாற்றியிருந்ததால் என் கற்பனை  வீடை   காணாமல்  போனது.  ஒரு  அபூர்வ  மனிதர்  வீடு  அதே  பழைய  உருவில் பாதுகாக்கப்பட்டால்  அதற்குண்டான  மதிப்பே  வேறு  என்பது அவர்களுக்கு  தெரியாதா  என்ன?  அப்துல் கலாம் ஐயா வின் மதிப்பையும்  பெருமையையும்  அவர்  வீட்டு பெயிண்டிங் கலரை வைத்து  மதிப்பு  போடாதவர்களில்  நானும்  ஒருவன்.

ராமர்  பாதம் என்று  ஒரு  குன்றின்  மேல்  ஒருவர்  வாய் ஓயாமல்   பண உதவி கேட்டுக்கொண்டிருப்பது  அவரது  கவனம்  ராமர் மேல் இல்லைஎன்று இருந்தாலும்  நமது  மனத்தை  ராமர்  மேல்  செல்லாமல்   அவர்  துன்புறுத்துவது  ராமருக்கே  பிடிக்காது  என்பதால்  தான்  ராமர்  பாதம்  வாசலில்  கூரான கொம்புகளோடு  நன்றாக  வளர்ந்த  சில  ஆடுகள்  நம்மை  நகர விடுவதில்லை.  கையில் உள்ள   வாழைப்பழம் வேண்டுமா  குடல் ஆட்டுக்கொம்பு மூலம்   வெளியே வராமல்  உள்ளேயே    இருக்கவேண்டுமா என்ற  முடிவை  நீங்கள்  கட்டாயம்  எடுத்தே  ஆகவேண்டும்.    கந்தமாதனம்  இன்று   இந்த குன்றுக்கு  பெயர்.  இங்கு தான்  ராமர்  நின்று  இலங்கை  எந்த திசை  என்று  சோதித்தார்.   எங்கு சேது பாலம்  அமைப்பது  என்று  முடிவெடுத்தார். 

ராமர்  தீர்த்தம்  என்று  குளம் ஒன்றுக்கு  அழைத்து செல்லப்பட்டேன்.  குளத்து  ஜலத்தை  ப்ரோக்ஷணம்  பண்ணிக்கொண்டால் ஜன்மாந்திர  பாபங்கள் விலகும்  என்று  அங்கு  யாருக்கோ  ஒரு  வாத்தியார்  சொல்லிக்கொண்டே தக்ஷினையை  இடுப்பில்   முடிந்தார். குள த்துக்கு சென்றோம்.  குளத்தில்  நிறைய  ஆடுகள்  மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.  ஒரு  பொக்லைன் வண்டி  மண் வாரிக்கொண்டிருந்தது.   '' அப்பனே அவ்வளவு சுலபத்தில்   உன் ஜன்மாந்திர பாபம்  தொலையுமா?   ஜலத்துக்கு காத்திரு''  என்று  சொல்லியது.   சரி என்று  திரும்பினோம்  லக்ஷ்மண தீர்த்தம்   இதே  காரணத்தால் பார்க்கவில்லை.  

வில்லுண்டி  தீர்த்தம்  என்று  சற்று  தொலைவில்  மதுரை போகும்   வழியில் உள்ளதே. இங்கு தானே,  ராமர்  சீதை  லக்ஷ்மணர்கள் ஆயாசத்தோடு  நடந்து வந்தபோது  ''நாதா   தாகமாக உள்ளதே''  என்று  சீதை கேட்க,   லக்ஷ்மணன் எங்கும்   குடிநீர்  தென்படவில்லையே,  சுற்றிலும்   கடலாக உள்ளதே  என்று  சொல்ல,  ராமரும்   பார்த்துவிட்டு  ''சரி   முயற்சி செய்வோம்''  என்று  வில்லை எடுத்து  ஒரு  சரம் தொடுத்து  பூமிக்கடியிலிருந்து  கடல் நீர்   கலக்காமல்  ஒரு  சுனை  ஏற்படுத்தி  சுகமாக குடிநீர்  கொண்டு வந்து   கொடுத்தார்.  சீதை  குடித்து மகிழ்ந்தாள்.  இப்போது அந்த  இடத்தில்  ஒரு  கிணறு.  கடலில்  இருக்கும்  அந்த  கிணற்றுக்கு   போக ஒரு   பாலம்.  பாலத்திற்கு  மேலும்  கிணற்றின்  சுவர்.  அந்த  கிணற்றுக்கு  காவல் காரர்   என்றோ  சொந்தக்காரர் என்றோ   சொல்லும் அளவுக்கு  அதை  நெருங்கி இருப்பவர்  புகைப்படக்காரர்.  கிணற்றை  சுற்றி   நிற்கவைத்து  கையோடு ஒரு   படம் எடுத்து  கொடுக்க  ஐம்பது  ரூபாய்.   கூட்டத்துக்கு தக்கவாறு  விலை  ஏறும்.   போட்டோ   எடுப்பார்.   பாலத்தின் மீது  ஓடுவார்,    கரையில் இருக்கும்  ஒரு பழைய  சிறிய  சிவன்  கோவில் வாசலில்  அட்டையால்  மூடி  ஒரு   பாட்டரியில்  இயங்கும்  போட்டோ பிரிண்டர் வைத்திருக்கிறார்.. ஒரு  சில   நிமிஷங்களில் வில்லுண்டி  தீர்த்த  கிணற்றோடு நீங்கள்  சிரித்துக்கொண்டு எத்தனை  காபி  வேண்டுமோ  அத்தனை காப்பியிலும்  எப்போதும்  நிற்கலாம்.  .  அந்த  நீரை எடுத்து  தருவதுற்கு   காமிராவோடு ஒரு  நீள  கயிற்றில் கட்டிய   சொம்பும்  அவரிடம்  உள்ளது.    தண்ணீர் உப்புகரித்தது.   ஏன் என்று  கேட்கும் முன்னரே '' கடல் நீர்   எங்கோ கசிந்து  அடியில்  நல்ல  நீர்  ஊற்றோடு  கலந்து விட்டது ''  என்று சொல்லிவிட்டு   அடுத்த வாடிக்கையாளரை  தேடி  ஓடினார். பிழைக்க  தெரிந்த இளைஞர். 

ராமேஸ்வரத்திலிருந்து  திருப்புல்லாணி  என்கிற  திவ்ய  தேச  வைஷ்ணவ ஸ்தலத்துக்கு  எல்லோரும்  செல்வார்கள். ராமநாதபுரத்தில்   8ம்  நூற்றாண்டில்  ராமநாதபுரம்   சேதுபதி மன்னர்கள்  கட்டிய  ஆதி ஜகன்னாத பெருமாள்  ஆலயம்  திருமங்கையாழ்வாரைக்கூட  இங்கே  வரவழைத்திருக்கிறது.  ராமர்  இலங்கைக்கு  ராவண யுத்தத்திற்கு  புறப்படு முன்னால் தர்ப்பையில்  சயனித்து  த்யானத்தில்  இருந்த  இடம்.  எங்கு  சேது பாலம்  கட்டலாம்  என்று  சமுத்ர   ராஜனின்  சீற்றம் அடங்க காத்திருந்த  இடம். விபீஷணன்  வந்து சரணாகதி  அடைந்த இடம்.  சமுத்ர ராஜன்  தம்பதியோடு வந்து  ராமரை  வணங்கிய சிலைகள்   அற்புதமாக உள்ளன.  ராம  அவதார  கார்யம்  முடியும்  முன்னே  தர்ப்பை  சயனத்தில்  எதிர்பார்ப்புகளோடு  இருந்த  ராமன்  இந்த கோவிலில்  ராவண  வதம் எல்லாம்  முடிந்து பட்டாபிஷேக  ராமர்  கோலத்திலும் காதி அளிக்கிறார். சந்நிதி  தனியே  உள்ளது.  பத்மாசனியை  தரிசனம் செய்ய  இரு  கண்கள்  நிச்சயம்  போதாது. 

ராமேஸ்வரம்  மதுரை சாலை நன்றாக இருப்பதால்  தூக்கம்  கெடாது. மதுரையில்  மீனாக்ஷ்மி அம்மன்  கோவில் பற்றி எழுத  நிறைய விஷயங்கள்  இருக்கிறது.  அதை   தனியே தான்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  திருமலை நாயக்கன்  மஹால்  என்று  ஒரு பெரிய  பெரிய  தூண்களோடு  கூடிய  கட்டிடத்தை  கட்டியவர்  ஒரு  இத்தாலிய கட்டிட கலைஞராம்.  தூண்களில்   '' பாலு  கோமதி, ராஜகோபால்  மைதிலி''  காதல் ஜோடிகளின்   பெயர்களை ஆட்டின்   கிளாவர்  வடிவத்துக்குள்  கிறுக்குவதில்  நமக்கு நிகர்  நாம்  தான் உலகத்திலேயே.  புராதன  சரித்திர புகழ் பெற்ற  இத்தகைய அசாத்திய  பொது பொக்கிஷங்களை அழிப்போர்  மீது  கடும்  தண்டனை  எடுத்தால்,  அபராதம் விதித்து  அதன் மூலம்  அரசாங்கத்துக்காவது வருமானம் வரட்டுமே. 

தமிழகம்  ஒரு காலத்தில்  கிருஷ்ணதேவ ராயர்  ஆளுமையில்  இருந்தபோது  மதுரையில்  சில  கலகங்கள்  நடந்ததை கேள்விப்பட்டு  அதை ஒடுக்க  தனது  செனாதிபதிகளில் ஒருவரான  நாகம  நாயக் என்பவரை மதுரைக்கு அனுப்பினார்.  உள்ளூர் சச்சரவு  கலகம் எல்லாம்  அடக்கிய  நாகமன்  தானே  அங்கு  அரசனாகிவிட்டது கிருஷ்ண தேவராயருக்கு  கோபத்தை வரவழைத்தது.  ''நீ  போய்  உன்  அப்பனின் கொட்டத்தை  அடக்கி  அவனை சிறைபிடித்து வா ''என்று  நாகமன் மகன்  விஸ்வநாத  நாயக் கை ராஜா  அனுப்பினார்.  அப்படியே  செய்தான் மகன்.  பிறகு  சமயம்  பார்த்து   ராயர்  கொஞ்சம்  சந்தோஷமாக  இருக்கும்போது    ''ராஜா,  என் அப்பா  செய்தது  நியாயம்  தான்.  அங்கு  ஒரு  அதிகாரம்  உள்ள  சிற்றரசன்  இருந்தால்  தான்  உள்ளூர்  கலககாரர்கள் மீண்டும்  தலையெடுக்க மாட்டார்கள். மதுரை பொல்லாத  ஊர்.  என்றான்  மகன். '' அவன் நேர்மையை  மெச்சி  

 ''ஓ  அப்படியா  விஷயம்.  போனால்  போகிறது  நீ  சொல்வதை  கேட்டு  நாகமனை   விடுதலை செய்கிறேன்.  ஆனால்  இன்றுமுதல்  நீ தான்  மதுரைக்கு  சிற்றரசன்.  போய் வா '' என்றார்  ராயர்.  1530லிருந்து  நாயக்க மன்னர்கள்  மதுரையை  ஆண்டுவந்ததில்  திருமலை நாக்  7 வது அரசன். (1623-1659)  திருமலை பலே அரசன்.  அருமையான  சிற்பக்கலை  நிறைந்த  அறுபுதமான  உலகில் எங்கும் பார்க்கமுடியாத  ஒரு  புது வசந்த மண்டபம் மீனாக்ஷி அம்மன் கோவில்கிழக்கு  வாசல் எதிரே கட்டினான். (அதன்  கதி  இப்போது  என்  கண்ணில்  நீர்  வரவழைத்தது)  மதுரையில்  இருக்கும்   வண்டியூர் தெப்பக்குளம்  நிர்மாணித்தவன்   இவனே. தெப்பக்குளம்  இன்னும்  யாராலும்  அழிக்கப்படவில்லை.  அதை சுற்றி  சுவர் இருப்பதாலும்  உள்ளே தண்ணீர்  நிரம்பி இருந்ததாலும்.  இப்போது  குளத்தில் மாடு  மேய்கிறது.  மழைக்கு காத்திருக்கிறது. வைகை கண் திறந்தால் மீண்டும்  நிரம்பும்.  வசந்த மண்டபம்  இப்போது ஊசி குத்த  இடம் இல்லாமல், கடைகளாக  போய் விட்டது.  சிற்பங்களை மறைத்து  கடைக்காரர்களின் அட்டகாசம்.  யாருக்குமே  பொறுப்பில்லையா.  வாசலில்  ராவணன் ஒரு  தூணில் சாமகானம் வாசித்து  பரமேஸ்வரனை  கைலாய  மலையோடு  தூக்கும்  அற்புதம்  கல்லால் ஆனதால்  தப்பி  வருகிறது.அதன் படம் தந்திருக்கிறேன்.  ராவணனை சுற்றி  பிளாஸ்டிக்  இரும்பு தட்டு முட்டு சாமான்கள்  விற்பனை பொருள்கள்.  ராவணன்  பாவம் கைலாய மலையில்  சிவன்  பார்வதியோடு  அவற்றையும்  சுமக்கிறான்.

தெப்பக்குளம்  தோண்டியபோது எடுத்த  மண்ணை தான்  இந்த  கட்டிடங்கள்  கட்ட  திருமலை நாயக்  உபயோகித்தானாம். திருமலை  நாயக் கட்டிய  அற்புத  கட்டிடங்கள்  திருப்பரங்குன்றம்,  அழகர் கோவில்  ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்பவர்கள் நின்று பார்க்க  நேரம்  இருந்தால்  ரசிக்கலாம்.  சாப்பாடு  தேடி  ஒடுபவர்கள்  கண்ணுக்கு இவை  கண்டிப்பாக  தப்பிவிட வாய்ப்பு அதிகம்.  

No comments:

Post a Comment