Sunday, March 20, 2011

காக்கா உட்கார பனங்காய் .........





''டேய், சீக்கிரம் போயி உன்னோட தேவதாஸ் தாடியை எடுத்துட்டு , கிளம்பற  வழியைப்பாரு'' . இது  பிரானேஷ்  அப்பா ஆறுமுகத் தோட குரல்  . 

''என்னப்பா, எப்ப பார்த்தாலும் ப்ராநேஷை   குறை  சொல்லிண்டே இருக்கீங்க''
இது   தங்கை லதா .

  பிரானேஷ்இன்ஜினியரிங் முடிச்சு ஒரு வருஷத்திலே நாலு உத்யோகம் மாத்திட்டான் அது ஆறுமுகத்துக்கு பெரிய குறை .இன்னிக்கு ஒரு ஆபீசிலே  நேர்முகத் தேர்வு இருக்கு, அதுவும் சென்னை  வேலை ! பிரானேஷுக்கு நல்ல நடிகன் விஷால் மாதிரி பர்சனாலிட்டி .அதுவே ஆறுமுகத்துக்கு ஒரு பெருமை, இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எப்ப பாரு அவனை எதாவது சொல்லிண்டே இருப்பார் .

அவன் ஒயிட் ஷர்ட் போட்டுக்க எடுத்தான் , உடனே ஆறுமுகம்  , ''டேய் ஒய்ட் வேண்டாம், ப்ளு கட்டம் போட்டுண்டு போ ''வேண்டாம் வெறுப்பாக அந்த பளு ஷர்ட் போட்டுண்டான் பிரானேஷ் .

**                           **                                 **                            **

'மிஸ்டர் சங்கர்  , கேன் யு கம் இன் '?

'எஸ் சார்' ..
கதவைத்திறந்து  சங்கர்  வந்ததும் ,ரமணி அவரை உட்கார சொன்னார். 

'சீ , மிஸ்டர் சங்கர் , சனிக்கிழமை ஒரு ரெக்ரூட்மென்ட் இருக்கு ,அதுக்கு நீங்கதான் சரியான பர்சன் , நம்ம கம்பெனிக்கு வேண்டிய ஆளுங்களை செலக்ட் பண்ணனும் ,உங்களுக்கு மிஸ் ராதாவும் ,மாதவனும் அசிஸ்ட் பண்ணுவாங்க''.

'ஒ.கே சார் ' சங்கர்  கதவைத்திறந்து வெளியே வரும் போது , யோசித்தான் , 'எதுக்காக எப்பவும் இல்லாம என்னை போயி ரெக்ரூட்மென்ட்பண்ண சொல்றார்!' சரி, பெரிய இடத்து விவகாரம் ,நமக்கேன் வம்பு 'சொன்னதை செஞ்சிட்டு போக வேண்டியது தான்.


**                       **                              **                         **                  **



ஹோட்டல் சுரபியில் மினி கான்பிரன்ஸ் ஹாலில்  நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தவர்கள் எல்லோரும் கையில் சர்டிபிகேட்ஸ் உடன்  வந்திருந்தனர் .
பத்து  மணிக்கு முன்னாடியே வந்து ரொம்ப பொறுமையாக சிலர் தங்கள் செல் போனில் பாட்டு கேட்டுக்கொண்டும் ,சிலர் செல் போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டும் சிலர் வெறுமவிட்டத்தையும்  பார்த்துக்கொண்டிருந்தனர்.

நம்ப ஹீரோ  பிரானேஷ் ரொம்ப ஸ்டைலாக ,அங்கிருந்த ரிசப்ஷனில்   போயி விசாரித்து விட்டு வந்து உட்கார்ந்தான். 

அவர்கள் அல்பாபெடிகல் ஆர்டரில் ஒவ்வொருத்தராக கூப்பிட்டனர். 

  பிரானேஷ் வந்து ஒரு இருபது நிமிடம் கழித்து அவனை போலேயே ப்ளு கட்டம் போட்ட சர்ட் போட்டுண்டு ஒருத்தன் வந்ததைப் பார்த்த பிரானேஷுக்கு அப்பா மேல் கோபமாக வந்தது . இருந்தாலும் கண்ட்ரோல் பண்ணிண்டு நடக்கப் போறதைப் பற்றிய கவலையுடன் இருந்தான். 
இவன் பெயரை கூப்பிட்டதுதான் தாமதம் , உடனே எழுந்து போனான். 

உள்ளே போனவுடன் அறையை ஒரு நோட்டம் விட்டான் , மிடில் ஏஜ் ஆளுடன் , ஒரு பெண்ணும், ஒரு பையனும் தான் இருந்தனர். அந்த மிடில் ஏஜ்
ஆள் யாருடனோ செல் போனில் பேசிக் கொண்டே இவனை பார்த்து ஒரு சின்ன ஸ்மைல் கொடுத்தான்,இவன் செய்வதறியாது பதிலுக்கு பட்டும் படாததுமாக ஒரு ஸ்மைல் செஞ்சான் .

இவனுடைய சர்டிபிகேட்ஸ் பார்த்து விட்டு இரண்டு, முன்று கேள்விகள் கேட்டு விட்டு  அனுப்பி விட்டான். 

பிரானேஷுக்கு சந்தேகம் தான், இந்த வேலையாவது கிடைக்குமா என்று. 

இவன் ரூமை விட்டு வெளியே வரும் போது தான் பார்த்தான் அந்த ப்ளு கலர் சர்ட் ஆளும் இவனை பின் தொடர்ந்து உள்ளே போவதை. 

உள்ளே சங்கருக்கு  ஒரு பெரிய ஷாக் .

இது என்னடா , இப்போதான் ஒரு ப்ளு சர்ட் போச்சு ,அதுக்குள்ளே இன்னொன்னா? அடக் கண்றாவியே! இப்போ என்ன பண்றது? சரி போ, உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், ரெண்டு போரையும் செலக்ட் பண்ண வேண்டியது தான். 

அடுத்த நாளே ப்ராநேஷுக்கும், பிரசன்னாவுக்கும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போச்சு  வேலையில் சேர!

*                        *                              *                                    *
 நடந்தது என்ன ? ரமணிக்கு வேண்டிய இடத்து பையன் பிரசன்னா , தான் நேர்முகத்தேர்வு நடத்தினால் பிரசன்னாவுக்கு தெரிந்துவிடும் ,அது பிற்காலத்தில் பூகம்பமாக வெடிக்கலாம், அதனால், தான், சங்கரை அனுப்பியதோடல்லாமல் ,அவரிடம் சனிக்கிழமையன்று ப்ளு கலர் கட்டம் போட்ட சர்ட் போட்டுக் கொண்டு வருபவனை செலக்ட் செய்யணும் என்று கட்டளை. 

இது தான் சங்கரின் குழப்பத்திற்கு காரணம் .

இப்போ என்ன ஆச்சு?

பிரானேஷ் அப்பா சொன்னதை கேட்டதினால் வேலை கிடைத்தது , சங்கரின் போறாத காலம் இரண்டு பேரையும் செலக்ட் பண்ணிவிட்டார் தன்னை காப்பாற்றிக் கொள்ள . 

ஆக காக்கா உட்கார பனங்காய் விழுந்தது .










1 comment:

  1. ILoveTulips

    haha... another good one... appaakku gnaana dhrushti irukkumpola..
    ------------------
    devapriya
    பழமொழிக்கு அருமையான உதாரண கதை...
    ------------
    nice story. Yours,Usha.

    ReplyDelete