எந்த வீட்டில், தம்பதியினர் ஒற்றுமையாக, கருத்தொருமித்து வாழ்கின்றனரோ, அந்த வீட்டு குழந்தைகள் நல்லபடியாக வளர்வர் என்பது பொதுவான கருத்து; இதற்கு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் குடும்பமே உதாரணம்.
கோல்கட்டாவில் இருந்து, 120 கி.மீ., தூரத்தில் உள்ளது தேரேய்பூர் கிராமம். இவ்வூரில், மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர் பெரிய புள்ளி. இவருக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். அவர்களில் மூத்தவர் தான், ராமகிருஷ்ணரின் தந்தையான சுதிராம் சட்டர்ஜி. ராமபிரானின் பக்தர்; தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசும் குணமுள்ளவர்.
இக்கிராமத்தில், ராமானந்தர் என்ற ஜமீன்தார் இருந்தார். இவர் பிரிட்டிஷாருக்கு மொத்தமாக ஒரு தொகையை கொடுத்து, அவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார். அக்கிராமத்தின் வரி வசூல், இவருக்கு வந்து விடும். இதனால், அதிகம் சம்பாதிப்பதற்காக, மக்களை வாட்டி வதைத்து விடுவார்.
ஒருசமயம், ராமானந்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான் ஏழைக் குடியானவன் ஒருவன். அவன் மீது பொய் வழக்கு போட்டார் ஜமீன்தார். தன் வழக்கிற்கு ஆதரவாக, சுதிராமை சாட்சி சொல்ல அழைத்தார். ஆனால், அந்த ஏழைக்கு எதிராக பொய் சாட்சி சொல்ல மறுத்து விட்டார் சுதிராம்.
தனக்கு ஆதரவாக செயல்பட மறுத்த சுதிராமின், 50 ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்தார் ஜமீன்தார். உண்மைக்காக சொத்தை இழந்த சுதிராம், கமார்புகூர் என்ற ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். தன் நண்பரின் உதவியுடன் வாழ்வை துவக்கினார்.
சுதிராமின் மனைவி சந்திராமணியும், கணவரின் குணம் அறிந்து, அவருடன் ஒத்துழைத்து, குடும்பம் உயர உதவினார். இப்படிப்பட்ட அரிய தம்பதிக்கு பிறந்தவர் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!
பிப்., 18, 1836ல் பிறந்தார் ராமகிருஷ்ணர். தந்தையைப் போலவே பெரும் பக்தர்; மன திடம் மிக்கவர். தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளிகோவிலே கதியென கிடந்தவர்; காளிமாதாவிடம் பேசும் வல்லமை உடையவர். சாரதாதேவி அம்மையாரை திருமணம் செய்தார். இருந்தாலும், இருவருமே இல்லறத்தில் நாட்டம் செலுத்தாமல் பக்தியில் மூழ்கினர்.
இல்லறத்தில் இருந்தபடியே பக்தியை நாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தனர் இத்தம்பதியினர்.
‘நீங்கள் உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதற்கிடையில் உங்கள் மனதை இறைவன்பால் திருப்ப வேண்டும். இல்லையேல் உங்கள் வாழ்வு அனர்த்தமாய் போய்விடும்…’ என்பார் ராமகிருஷ்ணர்.
வீட்டில் கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ வேண்டும். நல்ல விஷயங்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால், பிள்ளைகளும் ஒழுக்கமானவர்களாக வளர்வர் என்பதற்கு ராமகிருஷ்ணரின் வாழ்க்கையே உதாரணம்.
No comments:
Post a Comment