Wednesday, August 12, 2015

ஒரு ராஜாவின் புலம்பல்

     

ஏக்கம்   என்பது  மனதின் அடியே  தேங்கி நிற்கும்  வண்டல் எனலாம்.

அது வெளியே அடிக்கடி வருவதில்லை.   அது வந்தால்  அதன் வெளிப்பாடு  எப்படியெல்லாமோ  இருக்கும்.  சிலர்  அழுவார், சிலர் வெறுப்பில் சிரிப்பார், சிலர்  கோபிப்பார்,  சிலர்  பொறாமைப் படுவார்,  வாடி  தனிமையில் வதங்குவார்.  ஏக்கம்  எதனால் வருகிறது.  நினைத்தது நடக்காமல் போனால் மட்டும் அல்ல.  முயன்றும் கிடைக்காதபோது.   சோதனைகள்  பல  மேலும் மேலும் தலை நீட்டி  உற்சாகத்தை கொல்லும்போது .

அந்த நேரத்தில் மனம் தேடுவது  ஆறுதல்.  இறைவனை  நாடுதல்.  நண்பர்களின் உறவினர்களின்  ஆதரவும் ஆதங்கமும்.
வேதாந்தம்  மனதுக்கு இனிக்கும் நேரம்  அது. 

தத்துவங்கள்  வாயிலும் வரும். செவியிலும்  நுழையும். 

ரெண்டே  அடியில் மிக உயர்ந்த  தத்துவங்களைச் சொல்ல   சிலரால் தான்  முடியும்.  தத்துவங்கள்  என்றாலே  புரியாத விஷயம்  என்று  நாம்  நினைக்கும்  தருணத்தில்,   கால கட்டத்தில்,  அவற்றைப்படிக்க  விருப்ப மூட்டும்  வகையில்  அமைந்திருப்பது  ஒரு பழைய கால  ராஜாவின்  நீதி  வாக்யங்கள்.  அந்த  ராஜா  பர்த்ருஹரி,  அவரை  பத்திரகிரியார்  என்றும்  அவர்  பட்டினத்தார்  சீடரானார், திருவிடை மருதூரில் கோவில் வாசலில் அமர்ந்திருந்தார்  என்றும்  அறிகிறோம்.  இந்த நீதி வாக்யங்கள்  தமிழில்   பத்திரகிரியார்  புலம்பல்  என்று  சிறப்பான கவிதைத் தொகுப்பாக  உள்ளது.  

 திருக்குறளில் இதே போன்று  அருமையான  விஷயங்கள் உள்ளது. எனினும்  சில  குரள்களை மற்றொருவர்   விளக்கிச்சொன்னால்  மட்டுமே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.  சில   நேரடியாகவே புரிகிறது.  ராஜா  அப்படியல்ல. எளிய  தமிழில் சிறப்பாக  சொல்கிறான்.   ஒரு சமாசாரம் என்னவென்றால்  அவன் சொல்லும்  விஷயத்தின்  தன்மை.  மும்மலம், சுழுமுனை, இட பிங்கல விவகாரங்களை  ஏற்கனவே  கொஞ்சம்  தெரிந்து வைத்துக்கொண்டிருந்தால்  இந்த  வாக்யங்கள்  பூரணமாக  தெட்டத் தெளிவாக மண்டையில் ஏறும். .

மிகவும் சக்தி வாய்ந்த  மருந்துகளை  நிறைய  சாப்பிடக்கூடாது.  வெறும்  வயிற்றில் அம்மாதிரியான  மருந்துகளை   உட்கொள்ளக்கூடாது.  அதுபோலவே  இந்த  நீதி வாக்யங்களை ஒவ்வொன்றாகத்தான்  அனுபவித்து  படிக்கவேண்டும்.  அது  பற்றி  சிந்திக்க வேண்டும்.  அப்போது  தான்  அவற்றின்  உள்ளே  புதைந்து கிடக்கும்    உயர்ந்த கருத்து  புலப்படும்.   எனவே  கொஞ்சூண்டு  மட்டும் சொல்கிறேன்.  

இன்றைக்கு  ராஜாவின்  உபதேசங்கள் இவையே:  

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?  
  (இங்கு ஏகமான  எழுத்தை  ''ஓம்'' என்று  கொள்ளவேண்டும்)

 அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்? 
(நல்வழிக்கு  குருவை தேடாமல் இருந்து விட்டேனே)

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்    (
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்? 
(இத்தனை நாள்  என்னுள்ளே உன்னை  ஆத்மாவாக  அறிந்து கொள்ளாமல் இருந்தேனே!)

என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்? 
(நான், எனது, என்று சுயநலமாக  இருந்தேனே. இனி நீயே எல்லாம்  என்று அறியவேண்டுமே)

ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்? 
(சர்வம் பிரம்ம மயம்  உணர்வது எப்போது)
காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்? 
(எளிதில் புரியும். மனதை அடக்குவது பற்றி )
பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்? 
(சகலமும் துறந்து  பற்றற்று பரமனையே  நினைப்பது )

ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்? 
(நிலையாமை  புரிதல்)
ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? 
(அபேதமாக  வித்யாசம் இன்றி  எல்லாம் ஒன்றேயாக புரிதல்)
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்? 
(உலக மாயையிலிருந்து விடுபடுதல்)

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்? 
(மனம் ஒருமைப் படுதல்)

கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்? 
(பிறவித துன்பம்  விடுபடுதல்)

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?  
(பொருளாசை துறந்து  அருளாசி தேடல்)
ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்? 
(அநித்தியத்தை விட்டு  நித்யத்தையே தேடுதல்)

காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்?  
(ஞானம் பெறுதல்)
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்? 
(எங்கும் எதிலும்  நீயே  உண்மையான ஸ்வரூபம் என்று புரிதல்)

குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்?
(எளிதில் புரியும் )

No comments:

Post a Comment