Thursday, December 11, 2014

நமஸ்காரம் 2



தாத்தா   உங்களை எங்க டீச்சர்களுக்கெல்லாம்   ரொம்ப பிடிக்கிறதாம் .  இன்னிக்கு  கிளாஸ்லே  எல்லா  மாணவ  மாணவிகளுக்கும்  உங்க    ''நமஸ்காரம் '' கட்டுரை   அர்த்தத்தை  எடுத்துச் சொல்லி   எல்லோருமே இனிமே  நமஸ்காரம் என்றே கைகூப்பி  கண்மூடி  சொல்லுங்கள்  என்று கூறினார்கள்.  அவர்களுக்கும்  இது புரிந்தது.  அவ்வாறே  செய்கிறோம்  என்று  உரத்த  குரலில்  அனைவரும்  பதில்  சொன்னார்கள். 

மகா பெரியவா  கூட  நமஸ்காரம்  பற்றி  எத்தனையோ சொல்லியிருக்கா என்று  சொன்னீர்களே ஏதாவது  சிலது சொல்லுங்கோ.

சொல்றேன்  கேளு.    பெரியவா   ஒரு  ஸ்லோகம்  அர்த்தம்   சொன்ன அழகிலேயே   ''நமஸ்காரம் '' பற்றிய   பெருமை புரியும்.   நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக  சொல்கிறேன். 

''மகாதேவா,  நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும்.  அது  என்ன தெரியுமா?  போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போறேனே  அது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்? இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.”

இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அநுபவசாலி, எனவே அவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும்! சந்தேகமில்லை.

நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை ‘அது தண்டமாகி விட்டது’ என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்தால் நம் சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

‘நாம் செய்கிறோம்’ என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். ‘பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்’ என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்

இது  புரியறதா  கோபு ?

பெரியவா எதையுமே   யாருக்குமே ஈஸியா  புரிஞ்சிக்கிறமாரி  சொல்றது  தான்  அவருடைய  சாதுரியம். 

 இன்னொரு சம்பவம்   சொல்றேன் கேள் 

பெரியவாளைக் கண்டு தரிசனம்  பண்ண  அஞ்சு ஆறு  பெரிய  படித்த மகா  பண்டிதர்கள்  காஞ்சி மடத்துக்கு  வந்தார்கள். அவர்  எதிரே   தரையில் அமர்ந்தார்கள். 
பெரியவா  யாரிடமோ  பேசிண்டிருந்தா.  அதை அவர்கள்  கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  திடீர்னு அவர்கள்  பக்கம் திரும்பி பெரியவா 

 என்கிட்டே வர  பக்தர்கள்  எனக்கு நமஸ்காரம்  பண்ணுகிறார்களே  நான்  அவர்களுக்கு   பதிலுக்கு  ''நாராயணா,  நாராயணா  என்று  சொல்றேனே.  நீங்கள்   எல்லோரும் உங்களை   நமஸ்காரம் பண்ணுகிறவர்களை  என்ன  சொல்லி  வாழ்த்துகிறீர்கள்?''
'' நாங்கள்  ''தீர்காயுஷ்மான் பவ :'' என்று சொல்றது தான்  பெரியவா  வழக்கம்.
''அப்படின்னா  என்ன  அர்த்தம்?''
பெரியவா  இதுக்கு போய்  அர்த்தம்  கேக்கறாளே ?  தெரியாமயா இருக்கும்  ஏதோ  இதிலே சூட்சுமம்  இருக்கிறது  என்று  உஷாரானார்கள்.
''என்ன  அர்த்தம்னு  கேட்டேன்?''
''தீர்காயுஷ்மான் பவ  என்றால் நீண்டகாலம்  சௌக்யமா இரு  என்று  அர்த்தம் ''  என  இழுத்தார் ஒரு  பண்டிதர்.
என்ன?  என்று  பெரியவா  அவர்கள்  அத்தனை  போரையும் ஒவ்வொருவராக  பார்த்தார்.  எல்லோருமே  அது  தான்  அர்த்தம்  என்கிறமாதிரி  ஆமோதித்தார்கள்.
பெரியவா கொஞ்ச  நேரம் மௌனமா  அவர்களைப் பார்த்துவிட்டு  '' நீங்க  சொன்ன  அர்த்தம்  தப்பு,   அதுக்கு வேற ஒரு  அர்த்தம் ''

அவர்கள்  பெரிய  பெரிய  மகா பண்டிதர்கள், சிரோமணிகள்.  முகத்தில்  ஈயாடவில்லை  எவருக்குமே.  வாயைப் பிளந்தபடி கைகட்டி அமர்ந்து பெரியவாளையே  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  நிசப்தம். ''எப்படி  இந்த  சாதாரண   எல்லோருக்கும் தெரிந்த  ஸம்ஸ்கிருத வார்த்தை தப்பாகும்?''
நானே சொல்லட்டா?  என்று  மஹா பெரியவா  தீர்க்காயுஷ்மான்  பவ என்பதற்கு  அர்த்தம் சொன்னார்கள். காதைத்தீட்டிக் கொண்டுஅனைவரும  கேட்க 

 " இருக்கிற மொத்த 27 யோகத்திலே,  ஒன்றின்  பெயர் ''ஆயுஷ்மான்''   11 கரணங்களிலே  ஒன்றின் பெயர்  ''பவ''  வாரம் 7 நாளிலே ''சௌமிய வாசரம்''  என்கிற புதன் கிழமையிலே  இந்த  ஆயுஷ்மானும்  பவ வும்  சேர்ந்து  வந்தால், அது  ரொம்பவே  ச்லாக்கியமானது.  இந்த  மூனும்  சேர்ந்து அமையறது ரொம்ப  அதிர்ஷ்ட வசம். நல்ல  பலனை தரக்கூடியது.  எனவே,  அப்படிப்பட்ட  அபூர்வமான  பலன் உனக்கு  கிடைக்குமாக ''  என்று  வாழ்த்துவது தான்  அது. 

அசந்து போன  பண்டிதர்கள்  அனைவருமே   அந்த சிம்பிள்  நடமாடும்   தெய்வத்தை வணங்கி பிரசாதம் பெற்று சென்றார்கள். 

No comments:

Post a Comment