Monday, October 20, 2014

தீபாவளி தேடல் ......!!


விடிஞ்சா  தீபாவளி.   விசேஷமான  நாள்   ஆயிற்றே. எங்கும் மகிழ்ச்சியும்  குதூகலமும் கொப்புளித்தது.  புத்தாடை, பக்ஷணங்கள், நண்பர்கள்,  உறவினர்  கூட்டம்.  

வயது   76 ஆகிவிட்டதே.  நிறைய தீபாவளி  பார்த்தாச்சு.  கிருஷ்ணா  உன்னை மட்டும்  தான்  பார்க்கணும்.  படத்திலே பார்த்த உன்னை  நேரில்  பார்க்கணுமே? எப்படா வருவே?

( ஜம்புநாதனுக்கு   கிருஷ்ண பக்தி  ரொம்ப  ஜாஸ்தி.  கிருஷ்ணா  கிருஷ்ணா  என்று  தான்  அவரது  வாய் எந்த  பையனைப்பார்த்தாலும்  கூப்பிடும்.   வீட்டில்  ஒவ்வொரு  கிருஷ்ணன்  சிலைக்கும்   படத்திற்கும்  ஒரு  பெயர்  வைத்து  அதைச் சொல்லி  தான்  அழைப்பார்.   அவர்  வீட்டில்  கிருஷ்ணன்,  கோபு  (கோபாலனின்  திரிபு)   கிட்டு,  சுட்டி,  கள்ளப்பயல்,  ப்ளூட்டுக்காரன்  என்னும்  எத்தனையோ   பேர் கொண்டவனாக  இருந்தான். 

கிருஷ்ணன்  பேசுவானோ,  பதில்  சொல்வானோ?   நீங்கள்  சிரித்தால் சிரியுங்களேன்.  ஜம்பு  சொல்வார்.  ''ஆஹா   அவன்  கேட்டதெல்லாம் கொடுப்பவன்  மட்டுமில்லே. கேட்டதுக்கு  பதில் கொடுப்பவனும்  கூட '' )

எனவே  கிருஷ்ணன்   அவர்  கேட்டதற்கு  பதில் அளித்தான்.  "ஆஹா  உன் விருப்பத்தை  பூர்த்தி செய்கிறேனே!" காத்திரு.  இதோ வருகிறேன்''  

ஜம்பு தாத்தா  கிருஷ்ணனை  தனியே  காண  விரும்பினார்.  எனவே  தோட்டத்துக்கு  சென்று   அமைதியாக  காத்திருந்தார் .  எங்கும் நிசப்தம்.  ''கிருஷ்ணா  என்று   ஹரிதாசில்  MKT   பாடின  பாட்டை  பாடினார்.   ஒரு குயில் அவர் கண்   எதிரே மாமரத்தில் ஒரு கிளையில் எங்கிருந்து வந்து  உட்கார்ந்தது.  கருப்பாக  அழகாக  இருந்தது.  மதுர குரலில் அது சில  நிமிஷங்கள்  இனிமையாக  கூவியது.  என்ன தோன்றியதோ சட்டென்று  பறந்தும் போயிற்று.  ஜம்பு கிருஷ்ணனுக்காக  காத்திருந்தார்.

நின்று விட்ட  மழை மீண்டும் வரும்  போல்  இருந்தது.  எங்கோ  ஒரு  பேரிடி முழக்கம்  கேட்டது.  தாத்தாவுக்கு   உள்ளே  போய்விடலாமா  மழையில்  மாட்டிக்  கொள்வோமோ என்று  ஒரு  கிலேசம். எனினும்  சற்று நேரம் மேலும்  கிருஷ்ணன்  வரவுக்காக  காத்திருப்போமே? .இன்னும் ஏன்  கிருஷ்ணன் வரவில்லை?''

''கிருஷ்ணா,   உன்னை பார்க்க, கேட்க  ஏன்  தொட கூட  முடியுமாமே?''  ஜம்பு தாத்தா  கிருஷ்ணனுக்காக  காத்திருந்தபோது  எங்கோ  எவரெல்லாம் சொன்ன  உபன்யாசங்கள், படித்தவைகள் எல்லாம்  மனதில் தோன்றியது.

''அய்யா  இங்கே  வந்து   உக்கார்ந்திருக்கீங்களா?''

''யாரு?''  திரும்பிப்பார்த்தார்   ஜம்பு.  வேலை செய்யும்  பெரியாயி ஒரு  சிறு குழந்தையை  பொட்டலமாக அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்

''என்னம்மா  வேண்டும்?''
.
'' ஒண்ணும் இல்லீங்க  அய்யா.  அம்மா கிட்டே புதுசா  பொறந்த  என் பேரனை த்தூக்கி யாந்து  காட்டி  ஆசீர்வாதம்  கேட்டேன்.    அய்யா  தோட்டத்திலே  இருக்கார் அவர் கிட்டேயும்  காட்டு  என்று சொன்னாங்க.''

'' ஆஹா   பேஷ் பேஷ். ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே   எடுத்துண்டு போ.
  மழை வரும்போல  இருக்கு..'' 

 '' எங்கிருந்தோ  ஒருபாதி  அணில் கடித்த  கொய்யா பழம் ஜம்பு  மீது  தொப்பென்று  மரத்தின் மீதிலிருந்து  ஜம்பு மீது  விழுந்தது.  அவர்  வாய்  தான்  பெரியாயிடம்  பேசியதே.  மனம் பூரா  கிருஷ்ணனை  தேடிகொண்டு   தான்  இருந்தது. கிருஷ்ணன் மீது கொஞ்சம்  கோபமும் வந்தது.

வெகு நேரம்  ஆகியும்  ஏன்  கிருஷ்ணன் வரவில்லை?  விர்ரென்று ஒரு  பட்டாம்பூச்சி  முகத்திற்கு  நேரே  பறந்து வந்தது  வந்ததும்  இல்லாமல்  இறைக்கையை அடித்துக்கொண்டு  அவர் கைமேல்  வந்து  உட்கார்ந்தது.

 மழை  தூற்றல்  ஆரம்பிக்கவே  வெடுக்கென்று  கையை  உதறிக்கொண்டு வீட்டுக்கு   உள்ளே சென்றார்.

பெரும்  ஏமாற்றம்  அவருக்கு.    ''வரேன்''  என்று சொன்ன  கிருஷ்ணன் வராவிட்டால்  சந்தோஷமாகவா இருக்கும்?

உள்ளே  அவர்  தினமும்  பூஜை  பண்ணும்  பெரிய ராதா  கிருஷ்ணன்  படம்.  நிறைய  அலங்காரம்  செய்து,  மலர் மாலைகள் சூட்டி  தூப தீபங்களோடு  காட்சியளித்தது.  எதிரே  தட்டுகளில் பழங்கள்,  நைவேத்யங்கள்.

ஜம்பு  தாத்தா  கேட்டார்  :  '' கிருஷ்ணா நீ  இப்படி பண்ணலாமா?'''வரேன்  என்று சொல்லி  ஏன் வரவில்லை.  எத்தனை  நேரம்  காத்திருந்தேன்?''

கிருஷ்ணன்  சிரித்தான்

''என்னை  ஏமாற்றியதில் உனக்கு  இத்தனை  சந்தோஷமா?''

''ஜம்பு .  உடனே  வரேன்  என்று சொல்லி விட்டு தான்   நான்  உடனேயே  வந்தேனே.   என் குரல்  கேட்டாய்.  ஒரு குயிலாய்  வந்து  உனக்கருகிலேயே  அமர்ந்து பாடினேன்.  நீ கேட்கவில்லை.  சரி  காது கேட்கவில்லையோ  என்று  ஒரு  பேரிடியாக  சத்தம் போட்டேன்.  நீ  எங்கே  கேட்டாய்?  பார்க்க வேண்டும்  என்று சொன்னாயே  என்று  ஒரு குழந்தையாய்  உன்னிடம்  வந்தேன்.  பார்க்ககூட  இல்லை.  என்னை  விரட்டி விட்டாய்.  சரி  தொடமுடியுமா என்றாயே  என்று  ஒரு அழகிய  பட்டாம்பூச்சியாய்  உன் கையை  தொட்டேன்.  வெடுக்கென்று  உதறி தள்ளினாய்.   என்னை குறை சொல்கிறாயே? '' கிருஷ்ணன்  சிரித்துக் கொண்டெ கேட்டான்.

ஜம்புவின்  உள்ளம்  உணர்ந்ததை  அவர்  கண்கள்  குளமாக காட்டியது.   இறைவனை  எங்கும், எதிலும்  எப்படியும்  காணலாமே, கேட்கலாமே, உணரலாமே!!   நாமும்  தீபாவளி  அன்றிலிருந்தே   அவனை  தேட ஆரம்பிக்கலாமா ?-- முதலில்  உள்ளிலிருந்தே...! 

No comments:

Post a Comment