Friday, October 10, 2014

அமைதியின் சின்னம்


அவன்  ஒரு  இளவரசன்.  சகல  சம்பத்துகளும்  அவனை அணுகி இருந்தன.  அவன்  பிறந்த ஏழாம் நாளே தாயை இழந்தான். தாய்  யார்  என்று  தெரியாமலேயே  வளர்ந்தான்.  உலகின் ஒரு  துக்கமும்  அவன் கண்ணில் படாமல்  குழந்தையை வளர்த்தான்  ராஜாவான  அவன் தந்தை.  

ஒரு நாள் மூப்பு  என்ன  என்று  கண்டு  கலங்கினான்.  
ஒரு நாள்  ஒரு   இறந்தவனின்  சடலம்  கண்ணில்  பட்டது.  
நோயாளி ஒருவனும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.  

இவை ஒரு சாதாரண  மனிதனை  பாதிக்காதவை. ஆனால்  அவனோ முற்றிலும் வேறு பட்ட பிறவி.  இந்த காட்சிகள் அவன்  மனதில் கல்லில்  வடித்த  கல்வெட்டாக அவனுள் பதிந்து  திரும்ப  திரும்ப  அவன்  மனதில்  சஞ்சலத்தை உண்டு பண்ணியது.  

அவனுக்கு  அதற்குள்  மணமாகி  ஒரு  குழந்தை வேறு.  இளவரசன்  சற்று காலத்தில்  மாபெரும்  சக்கரவர்த்தியாக வேண்டியவன்.   அவனை  ஏன்  எதற்கு  என்ற  கேள்விகள் வாட்டி வதைக்க  ஒரு  இரவு  ராஜ்ஜியம் , குடும்பம், மனைவி, குழந்தை  அனைத்தையும் துறந்து  காட்டுக்குள்  எங்கோ  சென்றுவிட்டான்.  இரவும்  பகலும்  அன்ன  ஆகாரமின்றி  ஏகாக்ரமான  சிந்தனை.  
அவன்  தேடிய  விடை கிடைத்தது.  
இளவரசன் கௌதமன் புத்தனானான். 
இனி அவன்  இல்லை.  அவர்.  
எண்பது வயது வரை    நாடெங்கும்   சுற்றி அலைந்து மக்களை  சந்தித்து அன்பை புகட்டினார். மக்கள்  வெள்ளம்  அவரை   தொடர்ந்தது.

நாடு  கண்டறியாத புது புத்த மதம் ஒன்று  தோன்றியது. உலகெங்கும்  அவர் பெயராலேயே  அது  இன்றும்  பலவாறாக  பின்பற்றப்பட்டு  வருகிறது.  துன்பத்திலிருந்து விடுதலை போதித்த அவர் உபதேசங்கள் எண்ணற்றோரை மதம் மாற்றியது.

மாபெரும் மனிதநேய பிதமகனாரான புத்தரின்  சில  சொல்லோவியங்களை (தம்ம  பதத்தில்  சில)  காண்போமா:

''உலகம்  மாயையால் போர்த்தப்பட்டிருக்கிறது.  உலக வாழ்க்கை அநித்தியம்.  மனித வாழ்வே  துக்கத்தின்  அடிப்படை யில்  எழுவது.  தியானத்திலும்  தியாகத்திலும் துக்கத்தை வெற்றி கொள்ளலாம்.  நீ உன்னை  அறிந்தால்  கடவுளைத்  தேடவேண்டிய  அவசியமில்லை...

உலகம்  மனிதனின் எண்ண  உருவகம்.  தெய்வீகம்  அல்ல. தனி மனிதன்  ஒவ்வொருவனும்  தனது  கட்டுப்பாட்டால் அடுத்து வரும்  பிறவிகளை இல்லாமல் செய்யமுடியும்.  ஆத்ம சோதனை ஒருவனை  உயர்விக்கும்,  உய்விக்கும்.  அவன்  இப்படி அடையும்  உயர்ந்த நிலை தான்   நிர்வாணம் எனப்படும்.  அகம்பாவம், ஆசை இவற்றிலிருந்து விடுதலை.  உலகைத் துறந்தவனுக்கு  பற்று  ஏது?   ஒவ்வொருவருமே ஒளி  விளக்காக  இருங்கள். உங்கள் விடுதலைக்கு  நீங்களே  உழையுங்கள். அந்த  விடுதலை  தான்  முக்தி  என்று பெயர் பெற்றது.

அவரது முக்ய  கொள்கைகள்  பஞ்ச சீலம்  என்று  பிரபலமானது:

1.   அஹிம்சை.   உயிர் கொல்லாமை.

2.  திருடாதே   -   மற்றவன் பொருள் மீது  எண்ணம்  போகவேண்டாம்.

3.  ஒழுக்கம்     -   அடக்கம்,  பிறரை மதித்தல்

4.   பொய்  சொல்லாமை -    அவசியமில்லாதது.

5.  மது அருந்தாமை.     - புத்தியை கூர்மையாக  வைத்துக்கொள்ளல்.

எவ்வுயிர்க்கும்   பிறவி,  மூப்பு,   மரணம்,  வியாதி ஆகியவை  தப்ப முடியாதவை.
துன்பத்தின்   காரணமே  அறியாமை, பேராசை.  துன்பம் அகலவேண்டுமானால்  இவை  அகல வேண்டும்.
எப்படி துன்பத்திலிருந்து  விடுதலை பெறுவது  என்பதற்கு  புத்தர்  கூறும்  எட்டு உபாயங்கள்: 

 சரியான பார்வை, சரியான  நோக்கம், சரியான  பேச்சு,  சரியான  நடத்தை,  சரியான  வாழ்க்கை முறை,  சரியான முயற்சி, சீரான  மனம்,  சீரான  மனக் கட்டுப்பாடு.   இதெல்லாம்  என்ன கொடுக்கும்.    நிர்வாணம்  என்கிற  முக்தியை. 

 இந்த கோட்பாடுகள் புத்திமதிகள்  பல பேரைக்  கவர்ந்தாலும்   இந்திய  மண்ணில் காலடி  ஊன்றாததன்  காரணம்  இந்து  சனாதன தர்மத்தில்  ஏற்கனவே  உள்ள  அடிப்படை  கொள்கைகள் தான்  இவை.   புத்தர்  அவற்றை  வலியுறுத்தி  மீண்டும்  தூக்கத்திலிருந்து  நம்மை   தட்டி எழுப்பினார்  என்று  எடுத்துக் கொள்ளலாம். 

சென்ற  வாரம்  ஒருநாள்  ஒரு  அன்புள்ளம்  என்னைத்  தன்   வீட்டுக்கு  அழைத்தது.  சென்றேன்.  அந்த  அழகிய   அமைதியான வீட்டுக்கு  அழகும்  அமைதியும்  சேர்த்துக்கொண்டிருந்த  புத்தர்  சிலை  வரவேற்று  சில   நிமிஷங்கள் என்னை  கண்மூடி  அவரை  நினைக்க வைத்தது.  அதன் வெளிப்பாடு தான்  இது.  

No comments:

Post a Comment