Tuesday, March 18, 2014

கிருஷ்ணா உனக்கு நன்றி எப்படி சொல்வது?

சுப்பு சாஸ்த்ரி  மீண்டும்  பூவுலகில் மனிதப்பிறவி எடுக்கவேண்டியதாயிற்று.  
அவரோ எப்பவும் கிருஷ்ணா கிருஷ்ணா  என்று போன பிறவியில்  இருந்தவர். அதனால்  இந்த  தீர்ப்பு. வந்ததும் ரொம்பவும்  வருத்தம்.
கிருஷ்ணனைக் கேட்டார்.

''நான் அவசியம்  மறுபடியும்  பூவுலகில் குழந்தையாக  பிறக்கவேண்டுமா  கிருஷ்ணா? ''
'
'ஆமாம்''

குழந்தை (பழைய சுப்பு சாஸ்திரி) ஒரு  வயிற்றில் வளர்ந்தது. பிறக்க வேண்டிய  நேரம் வந்தது. அது கேட்டது.
''
''நாளைக்கா  நான்  பிறக்கப்போகிறேன்? இவ்வளவு சின்னக்குழந்தையாக இருக்கிறேனே. எப்படி வாழ்வேன்?''

''விட்டுவிடுவேனா?  ஒரு  நல்ல  தேவதை உன்னைப்பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேனே?''

''நான் ஏதோ பாடிக்கொண்டும்  ஆடிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும் இங்கே  உன்னோடு இருந்தேனே... எதற்கு எனக்குப்போய்........''

''கவலைப் படாதே.  உனக்காக அந்த  தேவதையே  ஆடும்  பாடும்   சிரிக்கும்.  போதுமா?''

சுப்பு சாஸ்த்ரியின்  கவலை முகத்தில் தெரிய,  ''எனக்கு  பூலோக பாஷை தெரியாதே  எப்படி பேசுவேன், புரிந்து கொள்வேன் ?''

''இப்படி உனக்கு  யோசனை வரும்  என்றுதான்  அந்த  தேவதை உன்னோடு  பேசி, பாடி உனக்குப்  பேச  கற்றுக்கொடுக்க  ஏற்பாடு செய்திருக்கிறேன்''
.
''மீதி பேரோடு பேசுவது இருக்கட்டும், கிருஷ்ணா, உன்னோடு  எப்படிப் பேசுவேன்?''

''உனது  ரெண்டு கையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ள  அந்த தேவதை கற்றுக்கொடுக்கும்''
''பூலோகத்தில்  கொடூரமான ஆசாமிகள்  இருக்கிறார்களாமே.  நான்  எப்படி பிழைப்பேன்?''
.
''அந்த  தேவதையிடம் இதைப்பற்றியும்  சொல்லியிருக்கிறேன்.  தன்  உயிரைக்கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றும். பயம்  ஏன்?''

''கிருஷ்ணா, எனக்கேன்னாமோ  இங்கிருந்து உன்னை விட்டு போக மனமே இல்லை''

''கவலை விடு. அந்த தேவதை என்னைப்பற்றி  உனக்கு  ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும்.  எப்படி  என்னை மீண்டும் சேர்வதென்று சொல்லித்தரும்.''
.
இப்படி  பேச்சு நடக்கும்போது, சுப்பு சாஸ்த்ரி ஒரு குழந்தையாக பிறக்கும்  நேரம் வந்துவிட்டது.  ஏகப்பட்ட சத்தம்  பூமியில்  கேட்டது. 
.
''கிருஷ்ணா  நான்  பிறக்கும்  நேரம்  வந்துவிட்டது போல் இருக்கிறது.  முக்யமாக கேட்க மறந்து விட்டேனே?   அதுசரி,  யார் அந்த  தேவதை, அதன் பெயர் என்ன?''

''அதன்  பெயர்  உனக்கு  அவசியமில்லை.  அம்மா  என்று  கூப்பிட்டாலே அது  உனக்கு  சகல  பணிவிடைகளும் செய்யும். ஏன்,  கூப்பிடத்  தெரியும் முன்னாலேயே  தன்னை  உனக்கு  அரப்பணிக்கும். ''

சுப்பு சாஸ்திரிக்கு மட்டும்  அல்ல,  எந்த  குழந்தை பிறந்தாலும் அதற்கு அவன்  நியமித்த தேவதை தான்   அம்மா.   

கிருஷ்ணா  உனக்கு  நன்றி எப்படி சொல்வது?

No comments:

Post a Comment