1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில் ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன் பின் தான் உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை…. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.
ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப்போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மஹாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும்.
இதற்குள் பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், ஸ்வாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மஹாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறிவிட்டது.
எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்குப் பயணமானேன். மஹாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.
பெரியவா, அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது.
”பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ?”
நான் பெரியவா காலில் தடாலென விழுந்து விட்டேன்.
ஆஹா, வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்குத் தெரிந்தது? என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ?
இன்னொருசம்பவத்தையும் குறிப்பிடுகிறேன்.
ஒரு சமயம் கர்நூலில் பெரியவர் முகாமிட்டிருந்தார். நாங்கள் குடும்பத்துடன் பெரியவரைத் தரிசனம் செய்தோம். ஊருக்குக் கிளம்பும் வேளையில், பெரியவர் என்னை அழைப்பதாக ஒருவர் தகவல் சொன்னார். நான் பெரியவா முன் நின்ற போது, “உன் குடும்பத்தில் யாரோ சந்நியாசம் வாங்கியிருக்க வேண்டுமே?” என்றார்.
“எனக்குத் தெரிந்து அப்படி யாருமில்லையே பெரியவா!” என அவரிடம் சொன்னேன். பெரியவா என்னிடம் “நீ ஊருக்குப் போய், பெரியவர்களிடம் விசாரித்து, மடத்துக்குத் தகவல் கொடு” எனச்சொல்லி விடை கொடுத்தார்.
நான் ஊருக்குப் போய் உறவினர்களிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது.
“ஒரு வாரம் முன்பு தான், என் ஒன்றுவிட்ட சகோதரி மகன் ஆடிட்டர் சீனிவாசன், சேலம் கந்தாஸ்ரமத்தில் துறவறம் மேற்கொண்டு விட்டார்” என்ற தகவல் தான் அது.
பெரியவரின் அந்த ஞானசக்தியை எண்ணி என் கண்கள் பனித்தன. அவர் நடமாடும் தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment