Tuesday, October 8, 2013

இது கதையல்ல..! உதை...!!

(உங்கள் அபிமான சேட்டை.டிவியில் நடிகை குச்சுமி வழங்கும் நிகழ்ச்சி!)

குச்சுமி: கதையல்ல உதை நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு படப்பிடிப்புக்காக அம்மாண்டிப்பாளையம் போயிருந்தபோது அங்கே ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். மாப்பிள்ளைப்பையன் சூப்பிப் போட்ட ஐஸ்குச்சி மாதிரி, கன்னமெல்லாம் ஒட்டிப்போயி இருந்தான். பொண்ணு சாத்தூருலே வாங்கிட்டு வந்த புண்ணாக்கு மூட்டை மாதிரி புஷ்டியா இருந்தா! சமீபத்துலே அவங்க சென்னைக்கு வந்திருந்தாங்க! அந்தப் பையனோட கன்னம் உடுப்பி கிருஷ்ணபவன் உருளைக்கிழங்கு போண்டா மாதிரி உப்பிப்போயிருந்தது. அந்தப் பொண்ணைப் பாத்தா உருவிப்போட்ட குடைக்கம்பி மாதிரி ஒல்லிக்குச்சியா இருந்தா! என்னாச்சுன்னு கேட்டா, கல்யாணத்துக்கப்புறம் அந்தப் பொண்ணு அவனை அடிச்சு அடிச்சு, அவன் கன்னம் வீங்கிப்போயி முகம் லாலு பிரசாத் யாதவ் மாதிரி ஆயிருச்சு! இவனை அடிச்சு அடிச்சு இந்தப் பொண்ணுக்கு வீக்னஸ் வந்து இளைச்சுத் துரும்பாயிட்டா!

இதை ஏன் சொல்லறேன்னா, குடும்பத்தில் வன்முறைங்கிறது மிகவும் அதிகரித்திருக்கிற இந்தக் காலத்துலே, திருமணமாகி இருபத்தி ஐந்து வருடமா, சண்டையே போடாம, அடிச்சுக்காம, கடிச்சுக்காம வாழற ஒரு அதிசயத்தம்பதியரை நாம இன்னிக்கு சந்திக்கப்போறோம். அவங்களை சந்திக்கலாமா? வணக்கம் திரு.குப்பாமணி! வணக்கம் திருமதி.பாலாமணி!

(குப்பாமணியும் பாலாமணியும் குச்சுமிக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள்)

குச்சுமி: குப்பாமணி சார்! இத்தனை வருஷத்துலே உங்க மனைவி மேலே உங்களுக்கு ஒரு தடவை கூட கோபமே வந்ததில்லையா?

குப்பாமணி: ஹிஹிஹி! கோபமா, அதெல்லாம் உப்புப் போட்டு சாப்பிடறவங்களுக்கு வர்றதுங்க! எங்க பரம்பரையிலே பார்த்தீங்கன்னா தலைமுறை தலைமுறையா, இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, யூரியா, பாஸ்பேட்டுன்னு எல்லா வியாதியும் இருக்குதுங்க! அதுனாலே எங்க வம்சமே உப்புப் போட்டுத் தின்கிற வழக்கம் இல்லாதவங்க! இவ்வளவு ஏன், எங்க வீட்டுலே உப்புமான்னு கூடச் சொல்ல மாட்டோம். வெறும் ’மா’ன்னு தான் சொல்லுவோம். இல்லியா பாலாமணி?

பாலாமணி: ஹிஹிஹி! ஆமாங்க, எங்க பரம்பரையும் அப்படித்தானுங்க! அதுலேயும் எங்க கொள்ளுத்தாத்தா காலத்துலேருந்து எல்லாரும் அரசியல்லே இருக்காங்க! அதுனாலே எங்க வீட்டுலே யாருக்குமே வெக்கம்,மானம்,சூடு,சொரணை எதுவுமே கிடையாதுங்க! 

குச்சுமி: என்ன ஒரு ஜோடிப்பொருத்தம்? எவ்வளவு நிறைவாயிருக்கு உங்களைப் பார்க்க? இந்தக் காலத்துலே இப்படியொரு தம்பதியா? ஏன் மிஸ்டர் குப்பாமணி, பொதுவா மனைவிகள் தங்களுக்கு அந்தப் புடவை வேணும், இந்த நகை வேணுமுன்னு கேட்டு அடம்பிடிச்சா ஆண்களுக்குக் கோபம் வருமுன்னு சொல்லுவாங்க! வாங்கிக் கொடுக்கலேன்னா பெண்களுக்குக் கோபம் வருமுன்னு சொல்லுறாங்க? இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

குப்பாமணி: ஹிஹிஹிஹி! எங்களுக்கு அந்தப் பிரச்சினையே கிடையாதுங்க! அவ எதைக் கேட்டாலும் சரி, அதைத் திருடியாவது கொண்டு வந்து கொடுத்திருவேன்னு அவளுக்குத் தெரியுமே! அதனாலே கோபம்,சண்டைங்கிறதெல்லாம் கிடையவே கிடையாதுங்க!

பாலாமணி: ஹிஹி! ஆமாங்க! இப்படித்தானுங்க, உஸ்மான் ரோட்டுலே ஒரு கடையிலே ஒரு புடவை பார்த்தேன். நல்லாயிருக்குன்னு சொன்னேன். அன்னிக்கு ராத்திரியே அதைக் கட்டியிருந்த பொம்மையோட திருடிட்டு வந்திட்டாருங்க! ஹிஹிஹி!

குச்சுமி: ஆஹா! ஆங்கிலத்துலே சொல்லுவாங்க, பெக், பாரோ ஆர் ஸ்டீல் என்று! உங்களுக்காக உங்க வீட்டுக்காரர் எது வேண்ணா செய்வார் போலிருக்கே!

குப்பாமணி: உண்மைதானுங்க! ஹிஹி! வீட்டுலே இருக்கிற ஸ்டீல் பாத்திரமெல்லாம் கூட ஸ்டீல் பண்ணினது தானுங்க!

பாலாமணி: அப்புறம், அந்த கிரைண்டரை மறந்திட்டீங்களே! ஹிஹிஹி! வீட்டுக்கு உபயோகப்படுத்துற டேபிள்-டாப் கிரைண்டரைத் திருடிக்கிட்டு வாங்கன்னு சொன்னா இவரு ’நம்ம வீட்டு வசந்த பவன்’ ஹோட்டல் கிரைண்டரையே திருடிட்டு வந்திட்டாரு! அதுனாலே, இப்பெல்லாம் ஒரு தடவை மாவு அரைச்சா ரெண்டு மாசத்துக்குத் தாக்குப் பிடிக்குதுங்க!

குச்சுமி: கேட்கவே ஆச்சரியமா இருக்கே?

குப்பாமணி: இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படிங்க? எங்க பிள்ளைங்க கூட திருவிழாவிலே திருடினது தானுங்க! ஹிஹிஹி!

பாலாமணி: ஆமாங்க, இப்போ இருக்கிற விலைவாசிக்கு எதுக்கு வீணா பிரசவ செலவுன்னு, சிம்பிளா கோவில் திருவிழாவுக்கோ, சினிமாத் தியேட்டருக்கோ போயி பிள்ளைங்களை ஒட்டிக்கிட்டு வந்திருவோங்க!

குச்சுமி: நேயர்களே! குப்பாமணி-பாலாமணி தம்பதியர் சொல்வது உண்மையா? இருபத்தி ஐந்து வருடங்களாக ஒரு தம்பதி சண்டையே போடாமல் குடும்பம் நடத்திக் குப்பை கொட்ட முடியுமா? இதைப் பத்தி நம்ம உளவியல் நிபுணர் டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் என்ன சொல்றார்னு ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு கேட்கலாம்! ஸ்டே ட்யூன்ட் வித் கதையல்ல உதை!

சில கணங்கள் கழித்து....

குச்சுமி: விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால், விளம்பர இடைவேளை இல்லாமலே சேட்டை டிவியின் ’கதையல்ல உதை,’ நிகழ்ச்சி தொடர்கிறது. குப்பாமணி-பாலாமணி தம்பதியர் சொல்லுவது போல இருபத்தி ஐந்து வருடங்களாக ஒரு தம்பதி ஒரு முறை கூட சண்டையே போடாமல் இருப்பது சாத்தியமா? இதைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது? நமது உளவியல் நிபுணர் டாக்டர்.ஊளம்பாறை உலகப்பனிடம் கேட்கலாமா? வணக்கம் டாக்டர்.உலகப்பன்!

டாக்டர்: வணக்கம்!

குச்சுமி: இப்போ நீங்க குப்பாமணி-பாலாமணி பேசினதைக் கேட்டீங்க! ஒரு டாக்டரா இதுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஒரு கணவனும் மனைவியும் சண்டை போடாமலே வாழ்க்கை நடத்த முடியுமா?

டாக்டர்: தொண்ணுத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நெதர்லாண்டிலே ஒரு தம்பதி இருபத்தி மூணு வருஷமா சண்டையே போடாம இருந்தாங்கன்னு கின்னஸ் புத்தகத்துலே வந்தது. அதுக்கப்புறம், இந்த மாதிரி ரிக்கார்ட் ஏற்பட்டிருக்கிறதா மருத்துவரீதியாக ஆதாரம் எதுவும் இல்லை. ஆனா, சமீபத்துலே ஒரு தம்பதி ஒரே நாளிலே இருபத்தி அஞ்சு தடவை சண்டைபோட்டதாக வக்கீல் விவாகரத்து வெங்கடசாமி ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியிருந்தாரு!

குச்சுமி: இந்த மாதிரி புருஷனும் மனைவியும் சண்டை போடாம இருக்கிறதுக்கு என்ன காரணமுன்னு நினைக்கறீங்க டாக்டர்?

டாக்டர்: இவங்களைப் பெத்தவங்க ஜீனிலே இருக்கிற கோளாறு மாதிரி தான் தெரியுது. இவங்களை அவங்க வளர்த்த விதம் சரியில்லேன்னு நினைக்கிறேன். இவங்களை எங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பினீங்கன்னா இவங்க இரத்தத்தைப் பரிசோதனை பண்ணி, அப்படியே எழும்பூர் மியூஸியத்துலே வைக்கலாம்னு தோணுது!

குச்சுமி: இப்படி புருஷனும் மனைவியும் சண்டையே போடாம இருக்கிறது குடும்பத்துக்கு நல்லதா டாக்டர்? இதனாலே என்ன பாதிப்பு ஏற்படும்.

டாக்டர்: அதாவது, புருஷனும் மனைவியும் சண்டையே போடாம இருந்திட்டாங்கன்னா, புடவைக்கடை,நகைக்கடை, சினிமாத்தியேட்டர், ஹோட்டல் எல்லா இடத்துலேயும் கூட்டம் குறைஞ்சு போயி இதுனாலே பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாமுன்னு டாக்டர். கம்மர்கட் சென் சொல்லியிருக்காரு!

குச்சுமி: உண்மை தான் டாக்டர்! எனக்குக் கூட காலையிலே டிபன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு தடவை, லஞ்சுக்கு அப்புறம் ஒரு தடவை, ஈவ்னிங் சிப்ஸும் காப்பியும் சாப்பிடும்போது ஒரு தடவைன்னு மூணு தடவையாவது சண்டை போடலேன்னா தலையே வெடிச்சிடும்! இவங்களைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கே டாக்டர்?

டாக்டர்: எனக்கு மட்டுமென்ன? ஒரு சண்டையும் இல்லாட்டியும் என் மனைவி தோசைச்சட்டுவத்தாலே நாலு சாத்து சாத்தினாத் தான் அன்னிக்குப் பொழுது விடிஞ்சா மாதிரியிருக்கும்.

குச்சுமி: ஓ ஐ சீ! உங்க காதுப்பக்கத்துலே ஒரு பெரிய கீறல் தெரியதே, என்னான்னு கேட்கணுமுன்னு நினைச்சேன். நல்ல வேளை, நீங்களே சொல்லிட்டீங்க! தேங்க்யூ டாக்டர்!

டாக்டர்: யூ ஆர் வெல்கம் மேடம்!

குச்சுமி: டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் சொன்னதைக் கேட்டீங்க! மீண்டும் நாம குப்பாமணி, பாலாமணியோட பேசலாமா? அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ரேக்!

கேமிராமேன்: ஆத்தா, அதான் சொன்னேனில்லே? ஒரு விளம்பரம் கூடக் கிடையாதுன்னு! நீ பாட்டுக்குக் கன்டின்யூ பண்ணும்மே!

குச்சுமி: ஓ.கே! மிஸ்டர் குப்பாமணி! உங்களையும் உங்க மனைவியையும் பார்க்க ரொம்பப் பரிதாபமா இருக்கு! இப்படி சண்டையே போடாம நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையிலே என்னென்ன மிஸ் பண்ணறீங்கன்னு உங்களுக்குத் தெரியலே!

குப்பாமணி: ஹிஹிஹி! அதுக்கு என்னங்க பண்ணுறது?

குச்சுமி: சும்மா, ஒரு லுல்லுலாயிக்காகவாவது ஒரு சின்ன சண்டை போடுங்களேன், நம்ம சேட்டை டிவி நேயர்களுக்காக...

பாலாமணி: ஹிஹிஹி! சண்டையா..ஹிஹ்ஹி! என்னாலே முடியாதுங்க!

குப்பாமணி: என்னாலேயும் முடியாதுங்க! ஹிஹிஹி!

குச்சுமி: சும்மா ஒரு முப்பது செகண்டு சண்டை போட்டாப் போதும். ட்ரை பண்ணுங்க! உங்களாலே முடியும்.

குப்பாமணி: ஹிஹிஹி! அப்படீங்கறீங்களா? பாலாமணி, நீ என் கூட சண்டை போடேன்.

பாலாமணி: போங்க, நீங்க வேண்ணா போடுங்க, நான் போடமாட்டேன்.

குப்பாமணி: என்ன பாலாமணி, நான் என்னிக்காவது சண்டை போடுன்னு கேட்டிருக்கேனா? முப்பது செகண்டு தானே? சண்டை போடு பாலாமணி!

பாலாமணி: ஐயையோ, நான் மாட்டேன். நீங்க வேண்ணா போடுங்க!

குப்பாமணி: ஏய், என்னது நான் சொல்லிட்டேயிருக்கேன், மாட்டேன் மாட்டேங்கிறே! சண்டை போடப்போறியா இல்லையா?

பாலாமணி: சர்தான் போய்யா! நீ சொன்னா சண்டை போடணுமா? முடியாது போய்யா!

குப்பாமணி: ஐயா கொய்யான்னா அறைஞ்சுப்புடுவேன். என் கிட்டே ரவுஸா காட்டுறே!

பாலாமணி: அட போய்யா, நீ பெரிய பருப்பு! உன்னை ஐயான்னு சொல்லாம இன்னான்னு சொல்றதாம்!

குப்பாமணி: இன்னாம்மே வாய் நீளுது! தட்டுனா தாராந்துடுவே தெர்யுதா?

பாலாமணி: அடப்போய்யா கஸ்மாலம், உன் மூஞ்சியிலே என் பீச்சாங்கையை வைக்க....!

குப்பாமணி: என் கிட்டேயே டக்கால்டி வேலை காட்டுறியா? கீசிடுவேன் கீசி!

பாலாமணி: போய்யா சோமாறி! 

குச்சுமி: ஹலோ, பாலாமணி, குப்பாமணி! முப்பது செகண்டு முடிஞ்சு போச்சு!

பாலாமணி: இன்னா முடிஞ்சு போச்சு? பெரிய பருப்பா நீயி? நீ சொன்னாக்கண்டி சண்டை போடுறதுக்கும் நீ சொன்னாக்கண்டி நிறுத்தறதுக்கும் நீயென்ன பிஸ்தாவா? டாப்பு எகிறிடும்மே!

குச்சுமி: ஹலோ! புரொடக்ஷன் டேமேஜர், அதாவது புரொடக்ஷன் மேனேஜர் எங்கேய்யா? செக்யூரிட்டி எங்கேய்யா?

குப்பாமணி: ஹிஹிஹி! இன்னாம்மே பயந்திட்டியா? பாலாமணி, வா டான்ஸ் ஆடுவோம். நாங்க புத்ஸா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! நல்லாப் பாட்டுப் படிக்கும் வானம்பாடி தானுங்க!

குச்சுமி: ஐயையே! இதென்ன இப்படி ஆடுதுங்க? யோவ் புரொடக்ஷன் மேனேஜர்! இவங்களை எங்கேருந்திய்யா பிடிச்சிட்டு வந்தே?

புரொடக்ஷன் மேனேஜர்: மேடம், தப்பு நடந்திருச்சு மேடம்! தவறுதலா கீழ்ப்பாக்கம் மென்டல் ஆஸ்பத்திரியிலேருந்து தப்பிச்சு வந்த ரெண்டு பேரை புருஷன் பொஞ்சாதின்னு நினைச்சுக் கூட்டிக்கிட்டு வந்திட்டோம்.

குச்சுமி: எனக்கு அப்பவே சந்தேகமாயிருந்தது! இருபத்தி அஞ்சு வருஷமா சண்டையே போட்டதில்லேன்னு சொன்னதுமே சந்தேகம் வந்திச்சே! ஆளை விடுங்க!! நீங்களும் உங்க புரோகிராமும்...போய்யா! நான் போயி மெகாசீரியல்லே நடிக்கப்போறேன்.
 

No comments:

Post a Comment