Wednesday, May 8, 2013

வேடிக்கையான கல்யாணப் பாட்டுக்கள் ...


போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்..
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்..

வாழை மரத்துடன் ,வெட்டி வேர் கொழுந்து,
மாவிலைத் தோரணம், பவழ ஸ்தம்பம்,
நாட்டிய கூடம், பச்ச மரகதம்,
பதித்த செவர்களும் ,பசும்பொன் தரையில்,
பலவர்ண பொடியினால், பதித்த கோலத்தில்,
நட்ட நடுவே, குத்து விளக்கேற்றி,
தூண்கள் தோறும், தூண்டா விளக்கும்,
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய,
பந்திபந்தியாய் பாயை விரித்து,
உத்தரணியுடன் ,ஜலபாத்திரங்களும்,
தலைவாழை இலை போட்டு, தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்

மும்மூர்த்திகளுடன், முனிவர்கள், தேவர்கள்
யக்ஷகின்னரர், கந்தர்வர்களும்,
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ,
அந்தணர்களும், முன்பந்தியிலே
அணிஅணியாக ,அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்.


அகல்யை ,திரௌபதி, சீதை, தாரை மண்டோதரியுடன்,

 பந்தடித்தார்போல், பட்டுகள் கட்டி ,
கெஜ்ஜை மெட்டிகள், கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு ,

பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்


மாந்தயிர் பச்சடி, தேங்காய்பூ கோசுமல்லி,
இரங்கிக்காய் கிச்சடி, பரங்கிக்காய் பச்சடி,
விதம்விதமாகவே ,வற்றல் அப்பளம்,
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு,
சிலாபிஞ்சு கறியும் ,பலாபிஞ்சு கறியும்,
பாகற்காய் கசக்கல், கத்திரிக்காய் துவட்டல்,
வாழைக்காய் வருவல், வாழைப்பூ துருவல்,
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென,
மொத்த பருப்பும், புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிச்ச குழம்பு, பூசணிக்காய் சாம்பார்,
வெண்டைக்காய் மோர்க்கடி, வெங்காய சாம்பார்,
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்,
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்,
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்,
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்,
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்,
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்,
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்,
அக்கார வடிசல் ,சக்கரைப் பொங்கல்,
என்னென்ன சுண்டல், வகையான வடை
சுமசாலா வடை ,வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன், நல்லெண்ணை வடை,
தயிர் வடையும் ,பால் போளிகளும்,
அனாரசம் ,அதிரசம் ,பதிர் பேணியுடன்,
சேமியா ஹல்வா, ஜிலேபி, லட்டு,
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு,
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு,
பேஷா இருக்கும் பேசரி லாடு,
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு,
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு,
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து,
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிகனி வர்கங்கள், பச்சை நாடாம்பழம்,
தேன்கதளி பழம், செவ்வாழை பழம்,
நேந்திரம் பழத்துடன், மாம்பழ தினுசுகள்,
பலாப் பழத்துடன் ,வாடை பரிமளிக்கும்,
ஆடைதயிர் வெண்ணை, தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்,
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்,
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்,
பாவக்காய் ஊறுகாய் ,வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி, மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி,
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்…



----------------------------------------------------------------------------


சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்,எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் .
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள். 
வெகு சங்கோஜக்காரி எங்கள சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்.

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் (2 times)

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் (2 times)

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
போதாக்குறைக்கு பலாப்பழங்களும் தின்னுத்தின்னு தீர்ப்பாள் 
அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் (2 times )

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் (2 times )

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் (2 times)

வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி......ஆமா சம்மந்தி 
சாப்பிடவே மாட்டாள்
எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
____________________________________________________________________

நலங்கிடுகிறாள் மீனலோசனி 
நாதருடன் கூடி 
நலங்கிடுகிறாள் மீனலோசனி 

நாரதரும் வந்து கானங்களை பாட 
நானாவித தாளங்கள் போட

சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து 
சுந்தரேசர் கையில் கொடுத்து 
பூபதி பாதத்தில் விழுந்து 
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி

சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள் 
சுந்தரேசர் மேலே தெளித்தாள் 
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள் 
வணங்கி சாமரம் வீசினாள்
______________________________________________________________________________ 
    மன்மதனுக்கு மாலையிட்டாயே - மாதே 
    மன்மதனுக்கு மாலையிட்டாயே 
    அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே 
    ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு 

    மன்மதனுக்கு மாலையிட்டு 
    மாலைதனை கைபிடித்து 
    கனகநோன்பு நோற்றதுபோல் 
    கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு 

    செந்தாழை ஓடையிலே 
    மந்தாரை பூத்ததுபோல் 
    இந்திரனோ சந்திரனோ 
    சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு.....
    _______________________________________________________________
    நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே .
    முத்திழைத்த பந்தலிலே ரத்னகோபமாட்டிருக்கு 
    வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட 

    பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு 
    நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட 

    எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர் 
    மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

    _________________________________________________________________________________
      கன்னூஞ்சல் ஆடி இருந்தாள், மனமகிழ்ந்தாள் 
      கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
      காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் 
      கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 

      பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து 
      ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து 
      கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ... 

      உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி 
      பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி 
      கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ... 

      அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட 
      இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட 

      கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
      காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்
      ______________________________________________________________

    மாலை சார்த்தினாள் கோதை 
    மாலை மாற்றினாள் 
    மாலடைந்து மதிலரங்கன் 
    மாலை அவர்தன் மார்பிலே 

    மையலாய் தையலாள் 
    மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள் 

    ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை 
    ஆசை கூறி பூசுரர்கள் 
    பேசி மிக்க வாழ்த்திட 
    அன்புடன் இன்பமாய் 
    ஆண்டாள் கரத்தினால் 

    மாலை சார்த்தினாள் கோதை 
    மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்
      __________________________________________________________________________
        கெளரி கல்யாண வைபோகமே 

        விருத்தம் 

        ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து 
        ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து 
        ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து 

        பல்லவி 

        கெளரி கல்யாண வைபோகமே 
        லக்ஷ்மி கல்யாண வைபோகமே (2) 

        சரணம் 

        வசுதேவ தவ பாலா 
        அசுர குல காலா 
        சசிவதன ரூபிணி 
        சத்யபாம லோலா - கெளரி கல்யாண 

        கொத்தோட வாழை மரம் 
        கொண்டு வந்து நிறுத்தி 
        கோப்புடைய பந்தலுக்கு 
        மேல் கட்டு கட்டி - கெளரி கல்யாண
            ______________________________________________________________________________
          ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 

          ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 
          பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே 

          ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே 
          நம்ம ஜானகி மணமகள் ஆனாளே 
          வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம் 
          சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம் 
          நாம் செய்த பூஜா பலமும் 
          இன்று பலித்ததம்மா - ஆனந்தம்

      No comments:

      Post a Comment